சிபிஐயின் முக்கிய ஆவணங்கள் கிடைத்தது எப்படி?.. ப.சிதம்பரத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை
Recommended Video
டெல்லி: சிபிஐயின் ரகசிய ஆவணங்கள் கிடைத்தது எப்படி என சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்திடம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அவரை கைது செய்த சிபிஐ, அவரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இந்த நிலையில் அவரை 5 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து அவர் வரும் 26-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் இருப்பார். அவரிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கியுள்ளனர். அதாவது கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் உள்ள சிதம்பரத்துக்கு சொந்தமான வீட்டில் நடந்த ரெய்டில் 2ஜி விவகாரம் தொடர்பான சிபிஐயின் முக்கிய அறிக்கைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பொருளாதார விவகாரங்கள்
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பாஜக கேள்வி எழுப்பியபோது ப. சிதம்பரம் கூறுகையில், நான் நிதி அமைச்சராக இருந்த போது அந்த ஆவணங்கள் அனைத்தும் பொருளாதார விவகாரங்கள் துறையால் அனுப்பிவைக்கப்பட்டவை என்றார்.
உச்சநீதிமன்றம்
ஆனால் சிபிஐயோ, சிதம்பரம் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பானவை. அந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சீலிடப்பட்ட உறையில் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவை என கூறுகிறது.
விசாரணை
ப. சிதம்பரம் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள் கடந்த 2013-ஆம் ஆண்டு ஏர்செல் மேக்சிஸ் விவகாரம் குறித்து அந்த ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை விசாரணை நடத்தியதன் அறிக்கை என கூறப்படுகிறது.
பொருளாதார விவகாரங்கள் துறை
நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சிபிஐ அமைப்பு வராத நிலையில் அந்த ஆவணங்களை யார் கொடுத்தது என சிதம்பரத்திடம் சிபிஐ கேள்வி எழுப்பியது. கடந்த 2012-ஆம் ஆண்டு மே முதல் 2014-ஆம் ஆண்டு மே வரை முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எந்தவித சிபிஐ ஆவணங்களையும் கொடுக்கவில்லை என பொருளாதார விவகாரங்கள் துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி கடிதம் அளித்துள்ளது.
ஆவணங்கள்
அந்த கடிதத்தை கொண்டு ப. சிதம்பரத்திடம் புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தின. அதே போல் 2ஜி விவகாரம் குறித்தும் எந்த வித அறிக்கைகளையும் பொருளாதார விவகாரங்கள் துறையிடம் சமர்ப்பிக்கவில்லை என அமலாக்கத் துறை தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது சிபிஐ கஸ்டடியில் உள்ள சிதம்பரத்திடம் ஆவணங்கள் குறித்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.