காவலில் வைக்க சிபிஐயே விரும்பாத நிலையில் ப.சி.க்கு காவலை நீட்டித்த சுப்ரீம் கோர்ட்
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சிபிஐ காவலை வரும் 5-ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவர் ரௌஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 12 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிபிஐ காவலை எதிர்த்து சிதம்பரம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீது நேற்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் அல்லது கடும் நிபந்தனைகளுடன் கூடிய வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.
திகார் சிறை
அப்போது நீதிபதி கூறுகையில், சிதம்பரம் தனது ஜாமீன் மனுவை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். கீழமை நீதிமன்றமும் உடனடியாக அந்த மனுவை விசாரிக்க வேண்டும். ஒரு வேளை ஜாமீன் கிடைக்காவிட்டால் சிதம்பரத்தை சிபிஐ காவலில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப வரும் 5-ஆம் தேதி வரை தடை விதித்தார்.
சிபிஐ கோரிக்கை
இந்த நிலையில் சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சிபிஐ நேற்றைய தினம் முறையீடு செய்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதியோ, சிபிஐ கோரிக்கை குறித்து செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஏற்கப்படும் என்றார்.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தனது பதில் மனுவை தாக்கல் செய்தது. அப்போது சிபிஐ கூறுகையில் சிபிஐ காவலுக்கு எதிராக ப.சிதம்பரம் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ப.சிதம்பரத்தின் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்க உகந்ததல்ல.
சிபிஐ பதில் மனு
சிபிஐ காவலை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை ப.சிதம்பரம் நாடியிருக்க வேண்டும். சிதம்பரத்துக்கு சாதகமான உத்தரவு அளித்தால் அது தவறான முன்னுதாரணமாக அமையும் என சிபிஐ பதில் மனு தாக்கல் செய்தது.
காவல் நீட்டிப்பு
"ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் எடுக்க விருப்பம் இல்லை. எனவே திகார் சிறைக்கு அனுப்புங்கள்" என சிபிஐ தரப்பு வாதம் செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி, ப.சிதம்பரத்துக்கு வரும் 5-ஆம் தேதி வரை காவல் நீட்டித்து உத்தரவிட்டார். சிபிஐ காவலில் எடுக்க சிபிஐயே விரும்பாத நிலையில் சிதம்பரத்துக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து சிதம்பரம் மொத்தம் 15 நாட்கள் சிபிஐ காவலில் வைக்கப்படுகிறார்.