லஞ்ச புகாரால் சிபிஐ அமைப்பையே ஆட்டம் காணச் செய்தவர்.. தொழிலதிபர் சதீஷ் சனா பாபு டெல்லியில் கைது
டெல்லி: ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனா பாபுவை, டெல்லியில் வைத்து அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மற்றும் சிலருடன் சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து ஊழல் செய்ததாக மொயின் குரேஷிக்கு எதிராக 2017 ஆம் ஆண்டில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை, கிரிமினல் வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் சிபிஐயின் பெரிய தலைகளுக்கு தொடர்பு இருப்பது அப்போதுதான் தெரியவந்தது.
மொயின் குரோஷிக்கு எதிரான வழக்குகளை அப்போதைய சிபிஐ துணை இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான குழு விசாரணை செய்து வந்தது. அந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியாக சதீஷ் சனா பாபு இணைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் இருந்து சனா பாபுவை விடுவிக்க சுமார் 3 கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றதாக ராகேஷ் அஸ்தானா மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபற்றி சதீஷ் சனா பாபு கொடுத்த வாக்குமூலத்தில், எனக்கு சிபிஐ 2017ம் ஆண்டில், அக்டோபர் 12, அக்டோபர் 23, நவம்பர் 1 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் சம்மன் அனுப்பியிருந்தது. எனவே வழக்கிலிருந்து விடுவிக்க நான் ரூ .5 கோடி வழங்க முன் வந்தேன். டிசம்பர் 10 மற்றும் 13ம் தேதிகளில் 3 கோடி ரூபாய் லஞ்சமாக வழங்கப்பட்டது, அதன் பின்னர் சம்மன் அனுப்புவது நிறுத்தப்பட்டது. இருப்பினும், மீதமுள்ள ரூ .2 கோடியை கொடுக்குமாறு ராகேஷ் சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
மறுபுறம், சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா இதில் தலையிட்டு, பாக்கி லஞ்சத் தொகையான ரூ .2 கோடியை பெற்றுவிட்டார். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்தார். இப்படி சிபிஐயில், நம்பர் 1, நம்பர் 2 பதவிகளில் இருந்தவர்களே மாறி, மாறி குற்றச்சாட்டு எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த வருடம் அக்டோபரில் ராகேஷ் அஸ்தானா மீது எப்ஐஆர் பதிவு செய்தது சிபிஐ. நம்பர் 2 பதவியில் உள்ள ராகேஷையே கைது செய்ய வேண்டும் என்பது சிபிஐ. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியே தலையிட வேண்டிய நிலை வந்தது.
அலோக் வர்மா பின்னர் ராஜினாமா செய்தார், அஸ்தானா சிவில் ஏவியேஷன் பணியகத்திற்கு மாற்றப்பட்டார். சிபிஐ அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தொலைபேசி உரையாடலும் ஒட்டு கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இத்தனை களேபரத்திற்கும் காரணமாக அமைந்தது சதீஷ் சனா வாக்குமூலம்தான். அவர்தான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.