கொல்கத்தா கமிஷனர் தப்பு செய்திருந்தால்.. வருந்தும் அளவுக்கு நடவடிக்கை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி
Recommended Video
டெல்லி: சிபிஐ அமைப்பு கொல்கத்தா கமிஷ்னருக்கு எதிராக தொடுத்துள்ள வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சில முக்கிய கேள்விகளை எழுப்பி இருக்கிறார். இந்த வழக்கு நாளை விசாரணை செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
தி ரோஸ் வேலி ஊழல் மற்றும் சாரதா ஊழல் ஆகியவற்றில் கொல்கத்தா கமிஷ்னர் ராஜீவ் குமாரை குற்றம்சாட்டி சிபிஐ நேற்று அவரை கைது செய்ய முயன்றது. இதை தடுக்கும் வகையில் கொல்கத்தா போலீஸ் சிபிஐ அதிகாரிகளை கைது செய்தது. அதன்பின் அந்த சிபிஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.
தற்போது கொல்கத்தா போலீசும், மேற்கு வங்க அரசும் சிபிஐயை தனது பணியை செய்ய விடாமல் தடுக்கிறது, இந்த வழக்கில் சிபிஐயின் விசாரணையை மேற்கு வங்க போலீஸ் தடுக்க பார்க்கிறது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.
சிபிஐ சார்பாக இந்த வழக்கு இன்று காலை தொடுக்கப்பட்டது. வழக்கு மீதான விசாரணை நாளை நடக்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
பொதுவாக ஒரு வழக்கு தொடுக்கப்பட்ட பின் அதனுடைய வாதம்தான் மிகவும் சுவாரசியமானதாக இருக்கும். ஆனால் இன்று இந்த வழக்கு தொடுக்கப்பட்ட விதமே கொஞ்சம் சுவாரசியமானதுதான். இன்று காலை சிபிஐ சார்பாக சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா வழக்கு தொடுத்தார். ஆனால் மனுதாக்கல் செய்ய தாமதமானதால் வழக்கு கடைசியாகத்தான் எடுக்கப்பட்டது.
இதனால் இன்று விசாரிக்கப்பட வேண்டிய வழக்கு நாளை விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்த மனுவை தாக்கல் செய்த போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் துஷார் மேத்தாவிடம் நிறைய கேள்விகளை எழுப்பினார்.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா: மேற்கு வங்கத்தில் சிபிஐ மீது முறையின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அங்கு மிகவும் மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது.
தலைமை நீதிபதி: தற்போது அங்கே நிலைமை எப்படி இருக்கிறது?
வழக்கறிஞர் துஷார் மேத்தா: மாநில போலீஸ் எங்கள் அதிகாரிகளை கைது செய்து வைத்துள்ளது.
தலைமை நீதிபதி: கொல்கத்தா போலீஸ் உங்களையும் கைது செய்துள்ளதா?
வழக்கறிஞர் துஷார் மேத்தா: சிபிஐ வைத்திருக்கும் சாரதா ஊழல் ஆவணங்களை கொல்கத்தா கமிஷனர் அழிக்க வாய்ப்பு இருக்கிறது. கொல்கத்தா போலீஸ் எப்போது வேண்டுமானாலும் இந்த ஆவணங்களை மொத்தமாக அழித்துவிட வாய்ப்புள்ளது. ஏற்கனவே இதற்காக அவர்கள் முயன்று வருகிறார்கள்.
தலைமை நீதிபதி: கொல்கத்தா போலீஸ் இந்த ஆவணங்களை அழித்துவிடும் என்பதை நிரூபிக்க உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? அதை நிரூபிக்க உங்களிடம் ஒரு ஆதாரம் இருந்தால் கூட போதும். நாங்கள் அவர்கள் மீது நினைத்து பார்க்க முடியாத நடவடிக்கையை எடுப்போம். ஆனால் உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா?
வழக்கறிஞர் துஷார் மேத்தா: இந்த பிரச்னைக்கு காரணமே சிபிஐ அதிகாரிகளை போலீஸ் சிறை பிடித்ததுதான். சிபிஐ இணை இயக்குனர் வீட்டை போலீஸ் சுற்றி வளைத்தது. பின் அவர் பலரிடம் போனில் பேசிய பின்பே போலீஸ் அங்கிருந்து சென்றது. இதனால் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க வேண்டும்.
தலைமை நீதிபதி: சரி.. இந்த வழக்கு நாளை விசாரிக்கப்படும்.