சிபிஐ vs மமதா மோதல்.. மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி.. கூச்சல்.. அவை ஒத்திவைப்பு!
மத்திய சிபிஐ அமைப்பிற்கும், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கும் இடையே நிலவும் மோதலை தொடர்ந்து இன்று லோக்சபாவில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
டெல்லி: மத்திய சிபிஐ அமைப்பிற்கு, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கும் இடையே நிலவும் மோதலை தொடர்ந்து இன்று லோக்சபாவில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா கமிஷ்னர் ராஜீவ் குமாரை குற்றம்சாட்டி சிபிஐ நேற்று அவரை கைது செய்ய முயன்றது. இதை தடுக்கும் வகையில் கொல்கத்தா போலீஸ் சிபிஐ அதிகாரிகளை கைது செய்தது. அதன்பின் அந்த சிபிஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். தற்போது கொல்கத்தாவில் மமதா பானர்ஜி இது தொடர்பாக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் லோக்சபாவில் எதிரொலித்து இருக்கிறது. லோகசபாவில் இந்த பிரச்னையை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை முடக்கி இருக்கிறார்கள்.
சிபிஐயை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி எதிர்க்கட்சிகள் அமளி செய்து வந்தனர். அதேபோல் சிபிஐயை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கம் செய்து வந்தனர். இதனால் அவையில் மிகவும் குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது.
லோக்சபாவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் மட்டுமில்லாமல் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். எம்.பிக்கள் எல்லோரும் சபாநாயகர் இருக்கை முன்பாக நின்று கோஷம் எழுப்பினார்கள். சபாநாயகர் அவர்களை அமர சொல்லியும் அமராமல் கோஷம் எழுப்பினார்கள்.
இந்த நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த பிரச்சனை குறித்து எழுந்து பேசினார். அதில், மேற்கு வங்க அரசு நடவடிக்கை மரபுக்கு எதிரானது. விசாரணைக்கு ஒத்துழைக்காததால் போலீஸ் கமிஷனர் மீது சிபிஐ நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல முறை சம்மன் அனுப்பியும் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
அதனால் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்க முயன்றோம்., இதுகுறித்து மேற்கு வங்க கவர்னரிடம் தெரிவித்து இருக்கிறோம். அவர் தலைமை செயலாளருடன் ஆலோசித்து இதில் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார், என்று கூறினார்.
ஆனால் இதை ஏற்காத எதிர்க்கட்சியினர் மேலும் அவையில் அமளியில் ஈடுப்பட்டனர். இதனால் அவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.