கொல்கத்தா கமிஷனர் குற்றவாளியா? அவர்தான் இதில் சாட்சியே.. சிபிஐக்கு மேற்கு வங்க அரசு பதில்!
சாரதா மோசடி வழக்கில் கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமார்தான் சாட்சியம், ஆனால் அவரை ஏன் குற்றவாளி போல சிபிஐ சித்தரிக்கிறது என்று மேற்கு வங்க அரசு சார்பாக சிபிஐ வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர் கேள்வி எழுப்பி உ
Recommended Video
டெல்லி: சாரதா மோசடி வழக்கில் கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமார்தான் சாட்சியம், ஆனால் அவரை ஏன் குற்றவாளி போல சிபிஐ சித்தரிக்கிறது என்று மேற்கு வங்க அரசு சார்பாக சிபிஐ வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர் கேள்வி எழுப்பி உள்ளார்.
கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமாரை சாரதா ஊழல் வழக்கில் விசாரிக்க அனுமதிக்க கோரி நேற்று சிபிஐ வழக்கு தொடுத்தது. நேற்று முதல்நாள் சிபிஐ அவரை கைது செய்ய முயன்று பிரச்சனை உருவாகவே தற்போது சிபிஐ உச்ச நீதிமன்றத்தை நாடி இருக்கிறது.
இன்று காலை 10 மணிக்கு பின் இந்த வழக்கில் விசாரணை நடக்க உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது.
என்ன குற்றச்சாட்டு
இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் நேற்று மனுதாக்கல் செய்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, கொல்கத்தா கமிஷனர் சாரதா ஊழலில் பல ஆவணங்களை அழிக்க பார்க்கிறார். அவர் சில சாட்சியங்களை மிரட்டுகிறார். அவரை விசாரிக்கவில்லை என்றால் முக்கியமான ஊழல் ஆவணங்களை சிபிஐ இழக்க நேரிடும் என்று கூறினார். இதனால் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது சிபிஐ.
மேற்கு வங்கம்
இதுகுறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞரும், எம்.பியுமான ஏ.எம். சிங்வி, ''சிபிஐ ஏன் கொல்கத்தா கமிஷனர் மீது குற்றச்சாட்டு வைக்கிறது என்று தெரியவில்லை. அவர்தான் இந்த ஊழல் விசாரணையின் சாட்சியே. அவரை எப்படி குற்றஞ்சாட்டப்பட்டவர் என்று சிபிஐ கூறுகிறது என்று தெரியவில்லை. இது பழிவாங்கும் நடவடிக்கை'' என்று அவர் குறிப்பிட்டார்.
இரண்டு கோரிக்கை வைத்தது
அதன் பின் இந்த வழக்கில் இரண்டு விதமான கோரிக்கைகளை சிபிஐ வைத்தது. அதன்படி கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமார் இந்த விசாரணைக்காக சிபிஐயிடம் சரண்டர் ஆக வேண்டும், இல்லையென்றால் விசாரணைக்கு அழைக்கும் நேரத்தில் வர வேண்டும். இன்னொன்று, இந்த ஊழலை சிபிஐ விசாரிக்க மேற்கு வங்க அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், ஆகிய கோரிக்கைகளை வைத்தது.
முடிவு
இந்த நிலையில் இந்த வழக்கை இன்று விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. சிபிஐ, கொல்கத்தா போலீசுக்கு எதிராக சில ஆதாரங்களை சமர்ப்பிக்க போவதாக தகவல்கள் வருகிறது. சிபிஐ முடிந்தால் ஒரு ஆதாரத்தையாவது சமர்ப்பிக்க வேண்டும் என்று, நேற்று ஏ.எம்.சிங்கி சவால் விட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.