மமதா vs சிபிஐ.. ஒன்று சேர்ந்த கட்சிகள்.. மத்திய அரசுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் முறையிட முடிவு!
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்ணா போராட்டம் செய்து வரும் நிலையில் தற்போது எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் முறையிட முடிவு செய்துள்ளது.
Recommended Video
டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்ணா போராட்டம் செய்து வரும் நிலையில் தற்போது எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் முறையிட முடிவு செய்துள்ளது.
மேற்கு வங்க முதல்வர் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார். கொல்கத்தாவில் மத்திய அரசுக்கு எதிராக அவர் தர்ணா செய்து வருகிறார்.
தற்போது சிபிஐக்கும் மேற்கு வங்க மாநில அரசுக்கும் இடையேயான பிரச்சனை பெரிய பூதகரமாகி உள்ளது. இதில் எதிர்க்கட்சிகளும் களத்தில் இறங்கி இருக்கிறது.
என்ன நடந்தது
நேற்று கொல்கத்தா கமிஷ்னர் ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்ய முயன்றது. தி ரோஸ் வேலி ஊழல் மற்றும் சாரதா ஊழல் ஆகியவற்றில் குற்றம்சாட்டி இந்த கைது நடவடிக்கையை எடுக்க சிபிஐ முயன்றது. இந்த ஊழல் வழக்கில் இவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று கைது செய்ய முயன்றது.
சிபிஐ கைது
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தா போலீஸ் சிபிஐ அதிகாரிகளை கைது செய்துள்ளது. சிபிஐ அதிகாரிகள் 15 பேர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதுதான் தற்போது கொல்கத்தாவில் நடக்கும் பிரச்சனைக்கும் மமதாவின் தர்ணாவிற்கும் காரணம்.
என்ன திட்டம்
இதையடுத்து தற்போது பல கட்சித் தலைவர்கள் மமதா பானர்ஜிக்கு போன் செய்து பேசி வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உட்பட பல எதிர்கட்சித்தலைவர்கள் மமதாவிற்கு ஆதரவாக களமிறங்கி இருக்கிறார்கள். நேற்று இரவே இவர்கள் எல்லோரும் ஆலோசனை செய்தது குறிப்பிடத்தக்கது.
புகார் அளிக்க முடிவு
இந்த நிலையில் தற்போது எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் முறையிட முடிவு செய்துள்ளது. அதாவது மத்திய பாஜக அரசு தேர்தல் நேரத்தில் அதிகாரிகளை கைக்குள் கொண்டு வரும் வகையில் சிபிஐயை வைத்து எல்லோரையும் பயமுறுத்துகிறது. சிபிஐ அமைப்பை பாஜக தவறாக பயன்படுத்துகிறது என்று புகார் அளிக்க இருக்கிறார்கள்.