சிபிஐ சிறப்பு இயக்குநருக்கு எதிரான விசாரணையில் தலையிட்ட மத்திய அமைச்சர், அஜித் தோவல்! பரபரப்பு தகவல்
Recommended Video
டெல்லி: சிபிஐ விசாரணையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் நிலவிய நிலையில், இருவரும் ஒருவர் மீது ஒருவர் லஞ்ச குற்றச்சாட்டு சுமத்தி வந்தனர். இதையடுத்து, இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது.
அதை எதிர்த்து, அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு, நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச வழக்கை விசாரித்து வந்த சிபிஐ உயர் அதிகாரி எம்.கே.சின்கா சார்பில் அவருடைய வழக்கறிஞர் 34 பக்க மனுவை தாக்கல் செய்தார்.
அதில், எம்.கே.சின்கா கூறியுள்ள சில தகவல்கள் திடுக்கிடும் தன்மையுடையவையாக உள்ளன. இறைச்சி வியாபாரி மொயின் குரேஷி மீதான வழக்கில் ஹைதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் சதீஷ் பாபு சனாவுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தினோம். அப்போது, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா சம்பந்தப்பட்ட விவகாரத்தில் பல பெரும்புள்ளிகளின் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
ஜூன் மாதம், மத்திய நிலக்கரி துறை இணை அமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரிக்கு அகமதாபாத்தை சேர்ந்த விபுல் என்பவர் மூலமாக, கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக சதீஷ் தெரிவித்தார். எனவே இந்த விசாரணையில் ஹரிபாய் தலையிட்டார்.
ராகேஷ் அஸ்தானாவை தனது வீட்டுக்கு வரவழைத்து, கே.வி.சவுத்ரி விசாரணை நடத்தியபோது, மொயின் குரேஷி உள்ளிட்டோருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என்று ராகேஷ் அஸ்தானா தெரிவித்துள்ளார். எனவேதான், ராகேஷ் அஸ்தானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுபற்றி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் கடந்த மாதம் 17ம் தேதி, அலோக் வர்மா தெரிவித்தார்.
இந்த வழக்கில் இடைத்தரகர் மனோஜ் பிரசாத்தை கைது செய்தபோது, அஜித் தோவல், 'ரா' அமைப்பின் சிறப்பு இயக்குனர் சமந்த் குமார் கோயல் ஆகியோருக்கு இருக்கும் தொடர்பு தெரிய வந்தது. மனோஜ் பிரசாத்தும், அவருடைய தந்தையும் அஜித் தோவலுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.
பெரும்புள்ளிகளின் தொடர்புக்கான ஆதாரங்கள் தெரிய வந்ததால்தான், என்னை நாக்பூருக்கு மாற்றி விட்டனர். இது உள்நோக்கத்தோடு எடுக்கப்பட்ட பணியிட மாறுதல் உத்தரவு. இவ்வாறு எம்.கே.சின்கா தனது மனுவில் கூறியுள்ளார். இந்த மனு மூலம், இவ்வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.