உச்சத்தில் கொரோனா.. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து... 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு
டெல்லி: நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், 12ஆம் வகுப்புத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியபோது, நாடு முழுவதும் இருக்கும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகப் பாடங்கள் நடத்தப்பட்டன.
கொரோனா பரவல்
இந்நிலையில் கொரோனா பரவல் கடந்த ஆண்டு பிற்பகுதியில் மெல்லக் குறைந்தது. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் செயல்படத் தொடங்கினர். இருப்பினும், இந்தாண்டு தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்ததால் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தன.
சிபிஎஸ்இ தேர்வு
இருந்தாலும்கூட மத்திய அரசியின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயில்பவர்களும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வு வழக்கான முறையில் எழுத்துதேர்வாக நடைபெறும் என்றும் தேர்வு சமயத்தில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு அறிவித்திருந்தது.
ஆலோசனைக் கூட்டம்
நாட்டிலுள்ள பல மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு மாநில முதல்வர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி, கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மூத்த செயலாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று மதியம் டெல்லியில் நடைபெற்றது.
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்
இந்நிலையில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், 12ஆம் வகுப்புத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு 10ஆம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து ஜூன் 1ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ அட்டவணை
முன்னதாக, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வுகள் மே 4ஆம் தேதி தொடங்கி ஜூன் 14ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் மே 4 முதல் ஜூன் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்து.