கர்தார்பூர் வழித்தட திறப்பு விழா.. நவ்ஜோத் சித்துவிற்கு கலந்து கொள்ள அனுமதி.. மத்திய அரசு முடிவு
டெல்லி: பாகிஸ்தானில் நடக்கும் கர்தார்பூர் வழி தட திறப்பு விழாவில் கலந்து கொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் கர்தார்பூர் வழி தடத்தை திறக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் இந்தியா பக்கம் உள்ள கர்தார்பூர் வழித்தடத்தை நாளை பிரதமர் மோடி திறக்க உள்ளார். அதேபோல் பாகிஸ்தான் பக்கம் இருக்கும் கர்தார்பூர் வழித்தடத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 9ம் தேதி திறக்க உள்ளார்.
சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக் தன்னுடைய கடைசி காலத்தில் கர்தார்பூர் பகுதியில்தான் வாழ்ந்தார். இதனால் கர்தார்பூர் பகுதியில் எல்லா வருடமும் தர்பார் சாஹிப் என்ற பெயரில் விழா நடத்தப்படும். இதற்கு சரியான பாதை இல்லாததாலும், விசா எடுத்து செல்வதில் சிரமம் இருந்ததாலும் அடிக்கடி விழா பாதிக்கப்பட்டது.
இதனால் கர்தார்பூர் வழித்தடத்தை இந்தியா பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. கர்தார்பூர் வழித்தடத்தை கடந்த ஒரு வருடம் முன் கட்ட தொடங்கி தற்போது பணிகள் முடிந்து திறப்பு விழா நடக்க உள்ளது. இந்த விழாவில் இந்தியர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்தார். இம்ரான் கானுடன் நவ்ஜோத் சிங் சித்து நட்பானவர் என்பதால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்த விழாவில் கலந்து கொள்ள நவ்ஜோத் சிங் சித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்டார்.
இதற்கு மத்திய அரசு அனுமதி தராமல் அமைதி காத்து வந்தது. இதற்காக அவர் மூன்று முறை கடிதம் அனுப்பினார். ஆனாலும் அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து அனுமதி கிடைக்கவில்லை என்றாலும் கூட நான் விழாவிற்கு செல்வேன் என்று நவ்ஜோத் சிங் சித்து குறிப்பிட்டார். இந்த நிலையில் பாகிஸ்தானில் நடக்கும் கர்தார்பூர் வழி தட திறப்பு விழாவில் கலந்து கொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.