கஜா நிவாரணம்.. ரூ. 1146 கோடி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவு.. ராமதாஸ் அதிருப்தி
தமிழகத்திற்கு ரூ.1,146 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
டெல்லி: கஜா புயல் நிவாரணத்திற்கு தமிழகத்திற்கு ரூ.1,146 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
கஜா புயலுக்கான அடுத்த கட்ட நிவாரணத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. புயல் பாதித்தவுடன், புயல் நிவாரணப் பணிக்காக 14,910 கோடி ரூபாய் வழங்க வேண்டுமென்று பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று கோரிக்கை விடுத்துவிட்டு வந்தார்.
பிறகு தமிழகத்தில் கஜா புயல் பாதித்த இடங்களை மத்திய குழு பார்வையிட்டு, அது சம்பந்தமான அறிக்கையினையும் தாக்கல் செய்தது.
353.70 கோடி ரூபாய்
இதனையடுத்து, மாநில பேரிடர் நிவாரண நிதியில், மத்திய அரசின் ஆண்டு பங்கிலிருந்து 353.70 கோடி ரூபாயை விடுவித்திருப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
200 கோடி ரூபாய்
பிறகு மின் சீரமைப்பு பணிகளுக்காக 200 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால் இந்த நிதி போதாது என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், உள்துறை அமைச்சகம் சார்பில் அதிகாரிகள் தலைமையிலான ஒரு ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது.
நிதி ஒதுக்கீடு
இந்த கூட்டத்தில்தான் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில், கஜா புயல் நிவாரணத்திற்கு தமிழகத்திற்கு ரூ.1,146 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைவான நிதி
கேட்டதை விட பல மடங்கு குறைவான நிதியைத்தான் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. எனவே இதன் மூலம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பு சரி செய்யப்படும் என்று தெரியவில்லை.
|
டாக்டர் ராமதாஸ் அதிருப்தி
இந்த நிலையில் மிகக் குறைந்த அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், கஜா புயல் பாதிப்புக்காக மத்திய அரசு ரூ.1,146 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது போதுமானதல்ல. இது தமிழக அரசு கோரிய தொகையில் 7 விழுக்காட்டுக்கும் குறைவு. இதைக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க முடியாது. தமிழக அரசு கோரிய தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.