ஹிண்டன்பர்க் அறிக்கையா? அதானி பங்குகள் சரிவா? கருத்து தெரிவிக்க முடியாது.. மத்திய அரசு மறுப்பு
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையின் குற்றச்சாட்டை இந்தியாவின் மீதான குற்றச்சாட்டாக அதானி குழுமம் வரையறுத்துள்ளது.
டெல்லி: அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான 'ஹிண்டன்பர்க்' சமீபத்தில் அதானி குழுமம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அதானி பங்குகளின் மதிப்பு கணிசமாக சரிந்தது. ஆனால் இது குறித்து கருத்து தெரிவிக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது.
ஹிண்டன்பர்க் வெளியிட்ட 413 பக்க ஆய்வறிக்கையில், அதானி கடந்த மூன்றாண்டுகளாக மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியிருந்தது. அதாவது, "கடந்த மூன்று ஆண்டுகளில் அதானி குழுமத்தின் பங்குகள் அபரிமிதமாக வளர்ந்தது. இதில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. பங்கு மதிப்புகளை அதிகரிக்க மதிப்புகளை போலி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் வலி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளன" என்று கூறியிருந்தது.
யாரும் எதிர்ப்பார்க்காத இந்த திடீர் அறிக்கை காரணமாக அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு 20-25% வரை குறைந்தது. இதனால் ஒரே நாளில் உலகத்தின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலிலிருந்து அதானி வெளியேற்றப்பட்டார். இது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.9.84 லட்சம் கோடியாகும்.
ப்பா அடி மேல் அடி.. 4 நாளில் எல்லாம் போச்சு.. புதிய பங்கு விற்பனையை கைவிட்ட அதானி என்டர்ப்ரைஸ்!
கடன்
இதில் ரூ.8.2 லட்சம் கோடி கடந்த மூன்று ஆண்டுகளில் ஈட்டப்பட்டிருக்கிறது. அதுபோல இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 819% வளர்ச்சியடைந்திருக்கிறது. இந்த திடீர் உயர்வை அதானி குழுமம் மோசடி செய்துதான் பெற்றிருக்கிறது என்பதுதான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. தராளமாக வரிச்சலுகை கொண்ட நாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் அதானி நிறுவனத்தின் பங்குகளை வாங்க செயற்கையான போட்டி உருவாக்கப்பட்டிருப்பதாகவம், அதேபோல அதானி குழுமம் வரம்புக்கு மீறி கடனை பெற்றிருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.
மறுப்பு
ஆனால் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் செயலர் அஜய் சேத் கூறுகையில், "ஒரு குறிப்பிட்ட நிறுவனம் தொடர்பான பிரச்னைகளுக்கு அரசாங்கம் பதிலளிப்பதில்லை" என்று கூறியுள்ளார். நேற்று(பிப்.01) பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்திக்கையில் இதனை அவர் கூறியுள்ளார். இதேபோல கடந்த செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு சரிவு குறித்து பதிலளிக்க மறுத்துவிட்டார்.
சரிவு
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளிவந்ததிலிருந்து அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கவுன்டர் பங்குகள் 19.69%, அதானி டோட்டல் கேஸ் 10%, அதானி கிரீன் எனர்ஜி 5.78%, அதானி வில்மர் 4.99%, அதானி பவர் 4%. சென்ட் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் 2.46% என சரிவை கண்டன. இருப்பினும் இந்த ஆய்வறிக்கை இந்தியாவுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல் என்று அதானி குழுமம் விமர்சித்திருக்கிறது. இது உள்நோக்கம் கொண்டது என்றும், அடிப்படை ஆதாரமற்றது எனவும் அதானி குழுமம் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது.
பதில்
இந்த மறுப்புக்கு பதிலளித்த ஹிண்டன்பர்க், "எங்கள் கேள்விக்கு அதானி குழுமம் பதில் அளிக்கவில்லை. தேசியவாதம் என்கிற போர்வையில் அதானி குழுமம் தனது முறைகேடுகளை மூடி மறைக்க முயற்சி செய்கிறது" என்று கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.