கொரோனா தடுப்பூசி... தினமும் எத்தனை பேருக்கு போடப்படும்... மத்திய அரசு புதிய அறிவிப்பு!
டெல்லி: ஒரு கொரோனா தடுப்பூசி மையத்தில் தினமும் 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தடுப்பூசி மையங்களில் முகக்கவசம், 6 அடி சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் என்றும் காத்திருப்பு அறை வாசலில் சானிடைசர் இருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
நாட்டில் பல நிறுவனங்கள் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அவசர அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருக்கும் நிலையில், இந்தியாவில் மிக விரைவில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.
அமெரிக்காவில் மோசமாகும் பாதிப்பு.. ஒரே நாளில் கொரோனாவால் 2273 பேர் மரணம்
தடுப்பூசிதான் தீர்வு
இந்தியாவில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்தாலும் டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு குறையவில்லை. கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே நிறைந்த தீர்வு. உலகின் பல நாடுகளில் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்து விட்டன.
அவசர தேவை
நமது நாட்டில் சீரம், பாரத் பயோடெக், ஜைடஸ் கேடிலா உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்கும்படி அனுமதி கோரியுள்ளன. ஆகையால் இந்தியாவில் மிக விரைவில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.
தினமும் 1௦௦ பேர்
இந் நிலையில் மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு:-
கரோனா தடுப்பூசி வழங்கப்படும் ஒவ்வொரு மையத்திலும் ஒரு காவலர் உள்பட 5 தடுப்பூசி அதிகாரிகள் இருக்க வேண்டும். ஒரு நபருக்கு தடுப்பூசி வழங்க குறைந்தபட்சம் 14 நிமிடங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. எனவே ஒரு கொரோனா தடுப்பூசி மையத்தில் தினமும் 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்படும்.
கண்காணிக்க வேண்டும்
ஒரு தடுப்பூசி மையத்தில் 3 அறைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். மக்கள் காத்திருப்புக்காக ஒரு அறையும், தடுப்பூசி வழங்குவதற்காக ஒரு அறையும், தடுப்பூசி வழங்கப்பட்டவர்களை அரை மணி நேரம் வரை தங்கவைத்து அவர்களை கண்காணிக்க ஒரு அறையும் பயன்படுத்த வேண்டும்.
அலர்ஜி வந்தால் என்ன செய்வது?
தடுப்பூசி வழங்கபட்டவர்களுக்கு அலர்ஜி உள்ளிட்ட சிறு உபாதைகள் ஏற்பட்டால் அதனை சரிசெய்ய மருந்துகள் வைத்திருத்தல் அவசியம். பெரிய பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு மாற்ற வசதிகள் இருக்க வேண்டும். தடுப்பூசி மையங்களில் முகக்கவசம், 6 அடி சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.
யாருக்கு முன்னுரிமை
காத்திருப்பு அறை வாசலில் சானிடைசர் இருக்க வேண்டும். தடுப்பூசிகளை ஐஸ்பேகுகளில் சரியான குளிர்நிலையில் வைத்திருக்க வேண்டும்.ஒரு மையத்தில் 5 பேர் கொண்ட முழு குழு(ஒரு காவலர் மற்றும் நான்கு தடுப்பூசி அதிகாரிகள்) இருக்க வேண்டும். தடுப்பூசி வழங்குவதில் மருத்துவ முன்களப் பணியாளர்களுக்கே முதலில் முன்னுரிமை என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பயன் பெறுவர்
அடுத்ததாக பாதுகாப்புப் படை வீரர்கள், காவலர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். அதற்கு அடுத்த படியாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், பல்வேறு நீண்டகால நோய்கள் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போட்டபப்டும் என முன்னுரிமை பட்டியலையும் அரசு வெளியிட்டு உள்ளது.
மாநில அரசுக்கு உத்தரவு
மேலும், தடுப்பூசிகளைப் பாதுகாக்க போதுமான குளிர்பதன கிடங்குகளை அமைக்க மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.