அதிர்ச்சி.. மத்திய அரசு கொண்டு வரும் நெக்ஸ்ட் தேர்வு.. எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு வைக்கப்படும் செக்!
மருத்துவத்தில் முதுகலை படிப்பிற்கான நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு நெக்ஸ்ட் தேர்வை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
டெல்லி: மருத்துவத்தில் முதுகலை படிப்பிற்கான நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு நெக்ஸ்ட் தேர்வை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. எம்பிபிஎஸ் இளங்கலை படித்த மாணவர்கள் எல்லோரும் கண்டிப்பாக இந்த நெக்ஸ்ட் தேர்வை எழுத வேண்டிய கட்டாயம் இதனால் ஏற்படும்.
மத்திய பாஜக அரசு இந்திய ராணுவத்தில் எவ்வளவு கவனம் செலுத்துகிறதோ அதற்கு இணையாக மருத்துவ துறையிலும் நிறைய கவனம் செலுத்தி வருகிறது. இந்திய மருத்துவ துறையில் நிறைய மாற்றத்தை கொண்டு வர வரிசையாக பாஜக முயன்று வருகிறது.
இதற்காக தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு துறைகளை மொத்தமாக மாற்றி வரும் மத்திய அரசு தற்போது மருத்துவ துறையிலும் நிறைய மாற்றங்களை கொண்டு வருகிறது.
என்ன கவுன்சில்
இந்திய மருத்துவ கவுன்சில்தான் தற்போது மருத்துவத்துறையை இந்தியாவில் கவனித்து வருகிறது. இந்த இந்திய மருத்துவ கவுன்சிலை மொத்தமாக கலைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தாக்கல் செய்த இந்த மசோதா லோக்சபாவில் வெற்றிகரமாக நிறைவேறியது.
என்ன தாக்கல்
இந்த மசோதாவில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் மாற்றங்களில் ஒன்றுதான் நெக்ஸ்ட் தேர்வு. அதாவது National Exit Test - NEXT. இந்த நெக்ஸ்ட் தேர்வு நாடு முழுக்க ஒரே மாதிரி நடத்தப்பட உள்ளது. நீட் தேர்வு போலத்தான் இதுவும் நடத்தப்படும். ஆனால் இது எம்பிபிஎஸ் யுஜி படித்த மாணவர்களுக்கான தேர்வாகும்.
நெக்ஸ்ட் தேர்வு என்றால் என்ன
எம்பிபிஎஸ் யுஜி படிக்கும் மாணவர்கள் தங்கள் இறுதி ஆண்டில் இந்த தேர்வை எழுத வேண்டும். நாடு முழுக்க இந்த தேர்வு நடத்தப்படும். எம்பிபிஎஸ் மாணவர்களின் திறனையும் , அவர்கள் கல்லூரியில் படித்ததையும், அவர்களின் மருத்துவ அறிவையும் சோதிக்கும் வகையில் இந்த தேர்வு நடக்கும். இது சரியான விடையை தேர்வு செய்யும் மல்டிபிள் சாய்ஸ் கேள்வி மூலம் நடத்தப்படும் தேர்வாகும்.
மாறும்
முன்பெல்லாம் மருத்துவத்திற்காக எம்பிபிஎஸ் படித்தால் அதன்பின் இந்திய மருத்துவ கவுன்சிலின் தகுதி தேர்வில் தோன்றி சில கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும். இந்த சோதனை மூலம் மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவராக பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும். அதன்பின்பே அவர்கள் மருத்துவர்களாக மாற முடியும். இந்த முறையைத்தான் தற்போது நெக்ஸ்ட் தேர்வு ஒழிக்கும்.
மொத்தமாக ஒழிக்கும்
அதன்படி நெக்ஸ்ட் தேர்வு மூலம் இனி இந்திய மருத்துவ கவுன்சிலின் தகுதி தேர்வில் தோன்றி மாணவர்கள் பதில் அளிக்க வேண்டியது கிடையாது. நெக்ஸ்ட் தேர்வில் பாஸ் ஆனால் போதும், மருத்துவராக பயிற்சி மேற்கொள்ள தொடங்கலாம். இந்த நெக்ஸ்ட் தேர்வு மாணவர்கள் மருத்துவர்களாக மாற தகுதி தேர்வாக நாடு முழுக்க நடத்தப்படும்.
நீட்
அதேபோல் தற்போது மருத்துவ மேல்படிப்பிற்கு நீட் தேர்வு தனியாக நடத்தப்படுகிறது. மருத்துவ மேல் படிப்பிற்கான நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு நெக்ஸ்ட் தேர்வு நடத்தப்படும். அதாவது எம்பிபிஎஸ் யுஜி முடித்துவிட்டு நெக்ஸ்ட் தேர்வு எழுதினால் போதும். அந்த மதிப்பெண்ணை வைத்தே மேற்படிப்பை மருத்துவ துறையில் செய்ய முடியும். அதேபோல் எம்பிபிஎஸ் நுழைவு தேர்வாக எப்போதும் போல நீட் தொடரும்.
வெளிநாடு என்ன
அதேபோல் வெளிநாட்டில் மருத்துவம் படித்து உள்நாட்டில் மருத்துவராக விரும்பும் மாணவர்கள், இங்கு Foreign Medical Graduate Exam (FMGE) தேர்வு எழுதி வந்தார்கள். அவர்களுக்கான இந்த தேர்வும் ஒழிக்கப்படும். அவர்களும் இனி நெக்ஸ்ட் தேர்வு எழுதினால்தான் இந்தியாவில் மருத்துவர்களாக பயிற்சி மேற்கொள்ள முடியும்.
என்ன செய்ய வேண்டும்
இந்த நெக்ஸ்ட் தேர்வு எழுதிய பின் 3 வருடம் கிராமம் அல்லது பழங்குடி மருத்துவமனையில் கண்டிப்பாக மாணவர்கள் பணியாற்ற வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிஜி மற்றும் யுஜி இரண்டு பிரிவிற்கும் இந்த 3 வருட சேவை பணி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
என்ன கட்டாயம்
மருத்துவராக பயிற்சி எடுக்க நெக்ஸ்ட் தேர்வு கட்டாயம் ஆகும் என்பதால் இந்த தேர்வு எழுதாமல் பயிற்சி மேற்கொள்ளும் நபர்களுக்கு 5 ஆண்டு சிறை மற்றும் 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். நாடு முழுக்க இந்த விதி உடனடியாக அமல்படுத்தப்படும்.
மிக மோசம்
ஏற்கனவே நீட் தேர்வு மூலம் மத்திய அரசு மக்களிடம் கடும் எதிர்ப்பை சந்தித்து இருக்கிறது. தற்போது நெக்ஸ்ட் தேர்வு மூலம் மருத்துவ மாணவர்கள் தொடங்கி எல்லோரிடமும் மத்திய அரசு எதிர்ப்பை சந்திக்கும் நிலையை அடைந்துள்ளது. அதேபோல் நாடு முழுக்க நீட் தேர்வையே சரியாக நடத்த தெரியாத மத்திய அரசு எப்படி நெக்ஸ்ட் தேர்வை நடத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
வியாபாரம்
ஏற்கனவே நீட் தேர்வு கோச்சிங் சென்டர்கள் மூலம் பெரிய மார்க்கெட் உருவாகி உள்ளது. இந்த நெக்ஸ்ட் தேர்வு இன்னும் பல கோடிக்கு மார்க்கெட்டை உருவாக்கும். மருத்துவம் ஏற்கனவே வியாபாரமாகி இருக்கும் நிலையில் மருத்துவ படிப்பும் இனி வியாபாரமாகும் அச்சம் ஏற்பட்டுள்ளது.