மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கலாம்... மத்திய அரசு அனுமதி
டெல்லி: மாற்றுத்திறனாளிகளும், முதியோர்களும் இனி வரும் தேர்தல்களில் தபால் மூலம் வாக்களிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை குறித்து ஆலோசித்து தேர்தல் நடத்தை விதிகளில் மத்திய சட்ட அமைச்சகம் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் இனி வரும் காலங்களில் சிரமமின்றி முதியோர்களும், மாற்றுத்திறனாளிகளும் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியும்.
ஆள்துணை
தேர்தலில் வாக்களிக்க வரும் முதியோர்களும், மாற்றுத்திறனாளிகளும் வாக்குப்பதிவு மையங்களுக்கு வருவதற்காக ஆள் துணை தேட வேண்டிய நிலை இப்போது பரவலாக உள்ளது. மேலும், வாக்குப்பதிவு மையங்களில் சாய்தள பாதை(ரேம்ப் வசதி) இல்லை என்றால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக வேண்டிய அவலம் உள்ளது.
தேர்தல் ஆணையம்
தேர்தல் அன்று வாக்குப்பதிவு மையங்களில் மாற்றுத்திறனாளிகள், மற்றும் முதியோர்கள் படும் சிரமங்கள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்களுக்கு தபாலில் வாக்களிக்க அனுமதி வழங்கலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
திருத்தம்
தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை குறித்து பரிசீலனை செய்த மத்திய சட்ட அமைச்சகம், தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகளும், 80 வயதை எட்டிய முதியோர்களும் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி அளித்துள்ளது.
யார் யாருக்கு?
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் தபால் ஓட்டு உரிமை ஏற்கனவே உள்ள நிலையில், அந்த பட்டியலில் மாற்றுத்திறனாளிகளும், முதியோர்கள் இப்போது புதிதாக இணைந்துள்ளனர்.
புதிய முயற்சி
தேர்தலின் போது வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் ஆணையம் இந்த புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.