லேப்டாப், போன்களை கண்காணிக்கலாம்.. 10 அமைப்புகளுக்கு அரசு அனுமதி.. அதிர்ச்சி!
நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும், செல்போன்களையும் கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Recommended Video
டெல்லி: நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும், செல்போன்களையும் கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து நபர்களின் கணினிகளையும், செல்போன்களையும் மொத்தமாக கண்காணிக்க முடிவு செய்து உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியை நேற்றுதான் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்தது.
மொத்தம் 10 அமைப்புகள், நிறுவனங்கள் இதற்கான அனுமதியை பெற்று இருக்கிறது. இதன் மூலம் இந்த அமைப்புகள் எல்லாம் நம்முடைய அனுமதி இல்லாமலே நம்முடைய கணினி மற்றும் போன்களை கண்காணிக்க முடியும்.
யாருக்கு எல்லாம் அனுமதி
மத்திய அரசு 10 அமைப்புகளுக்கு இந்த அனுமதியை வழங்கி உள்ளது. சிபிஐ, உளவுத்துறை, அமலாக்க துறை, மத்திய நேரடி வரிகள் வாரியம், வருவாய் புலனாய்வு இயக்குநரகம், தேசிய புலனாய்வு அமைப்பு, ரா, சிக்னல் புலனாய்வு இயக்குநரகம், டெல்லி கமிஷ்னர் அலுவலகம் ஆகியவை இனி நம்முடைய போன், கணினிகளை நம்முடைய அனுமதி இல்லாமல் கண்காணிக்க முடியும்.
என்ன செய்ய முடியும்
இதன் மூலம் இந்த அமைப்புகள் எல்லா தகவலையும் பெற முடியும். நம்முடைய புகைப்படங்கள் தொடங்கி, நாம் வைத்திருக்கும் கோப்புகள், அந்தரங்க புகைப்படங்கள், போன் பாஸ்வேர்ட் என உங்கள் எலக்ட்ரானிக் பொருட்களில் என்னவெல்லாம் வைத்து இருக்கிறீர்களோ அதை எல்லாம் எளிதாக அவர்களால் எடுக்க முடியும். உங்கள் அனுமதி இன்றியும் இப்படி செய்ய முடியும்.
எதை எல்லாம்
கணினிகள் என்று பொதுவாக மத்திய அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கையின்படி இந்த 10 அமைப்புகளும் கணினிகள், மொபைல்கள், டேப்லெட்கள், ஸ்மார்ட் வாட்ச், பென்டிரைவ், ஸ்மார்ட் டிவிகள் என்று எதில் இருந்தும் தகவல்களை எளிதாக பெற முடியும்.
ஏன் இப்படி
தேசிய பாதுகாப்பு கருதி இந்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. உலக நாடுகளின் அச்சுறுத்தலை சமாளிக்கவும், தீவிரவாத செயல்களை முறியடிக்கவும் , வழக்குகளை, விசாரணையை விரைவாக முடிக்கவும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெரிய அதிர்ச்சி
இந்த அனுமதி பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் அனுமதி இல்லாமல் எப்படி மக்களை அரசு கண்காணிக்க முடியும் என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இது மக்களின் அடிப்படை உரிமையில், அந்தரங்கத்தில் தலையிடும் முடிவு என்றும் கூறியுள்ளனர்.