மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு தடை.. மத்திய அரசு விதித்த தடையின் பின்னணி இதுதான்!
டெல்லி: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகா அளித்த விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. தமிழகத்தின் சம்மதம் இல்லாமல் அணை கட்ட முடியாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக புதிய அணை அமையும் இடம், அதற்கான திட்ட மதிப்பீடு பலன்கள் மற்றும் தகவல்கள் அடங்கிய வரைவு திட்ட அறிக்கையை கர்நாடகா அரசு மத்தி நீர்வளத்துறையிடம் விண்ணப்பித்தது. இந்நிலையில் வரைவு திட்ட அறிக்கைக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு நீர் வளத்துறை அனுமதி வழங்கியது.
பின் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு வரைபடத்துடன் கூடிய புதிய கடிதம் அனுப்பி வைத்தது கர்நாடகா அரசு. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி அளிக்ககக்கூடாது என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்பட பல்வேறு தலைவர் கர்நாடகாவின் செயலை கண்டித்தனர்.
இந்நிலையில் கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதத்தில், "மேகதாது பகுதியில் மட்டும் அணை கட்ட ஏன் நினைக்கிறீர்கள் ? மாற்று இடம் தேடலாமே. அணை கட்டுவதற்காக தேர்வு செய்த சுமார் 4996 ஹெக்டேர் காவிரி வன உயிர் சரணாலயம் மற்றும் காப்புக்காடுகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளீர்கள். அதற்கு பதிலாக வேறு இடங்களை தேர்வு செய்வது அவசியம் ஆகிறது. இதுதவிர கையகப்படுத்தப்படும் தனியார் நிலங்களுக்கு வழங்கப்பட உள்ள இழப்பீட்டு தொகை குறித்து தெளிவான தகவல்கள் விண்ணப்பத்தில் இல்லை. இது தவிர தமிழக அரசு மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கிறது. எனவே தமிழகம் அனுமதித்தால் மட்டுமே அணை கட்டுவது சாத்தியம்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.