சிகரெட் துண்டுகள், பேனர்கள் உள்பட 12 பிளாஸ்டிக்குகள் மீது தடை விதிக்கும் மத்திய அரசு
Recommended Video
டெல்லி: குளிர்பான பாட்டில்கள், தெர்மாகோல்கள், சிகரெட் துண்டுகள் உள்பட 12 பிளாஸ்டிக்குகள் மீது தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. அதன்படி 12 பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய அரசு முயற்சிக்கிறது.
அந்த வகையில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த பட்டியலை தொகுத்துள்ளது. அதன்படி 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பௌல்கள், கேரி பேக்குகள், பேக் செய்யும் பேப்பர்கள், கப், கிண்ணங்கள், தட்டுகள், லேமினேட் செய்யப்பட்ட கிண்ணங்கள், தட்டுகள், சிறிய பிளாஸ்டிக் பொருட்கள், சிகரெட் துண்டுகள், கொடிகள், பலூன்கள், மெழுகுவர்த்திகள், குளிர்பான பாட்டில்கள், ரோட்டோரம் வைக்கப்படும் பேனர்கள் (100 மைக்ரானுக்கு குறைவானது) ஆகியவற்றுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு கேடை விளைவிக்கும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை 2022-ஆம் ஆண்டுக்குள் தடை செய்வது என சுற்றுச்சூழலுக்கு பாதிப்புக்கு எதிரான அமைப்பு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.
மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக எதை பயன்படுத்துவது என்பது குறித்த ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் நிறுத்திவிடுவோம் என தெரிவித்திருந்தார்.