ஆந்திராவில் 3 தலைநகரங்கள்.. ஜெகன் மோகன் ரெட்டியின் திட்டம்.. மத்திய அரசு தலையிட மறுப்பு
டெல்லி: ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் அமைக்கும் விஷயத்தில் தலையிட மத்திய அரசு மறுத்துவிட்டது. தலைநகர் அமைப்பது என்பது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் என்று கூறியுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது அமராவதியை தலைநகராக அறிவித்து அதற்காக பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி பணிகளை மேற்கொண்டார். கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு பணிகள் நடந்து வந்தது.
இந்த சூழலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தலில் வென்று ஆந்திர முதல்வராக கடந்த ஆண்டு பதவி ஏற்றார். அமராவதி தலைநகர் திட்டப்பணிகளை முடக்கி வைத்துள்ளார். ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் திட்டத்தை செயல்படுத்த போவதாகவும் அறிவித்தார்,
ராணுவத்தை அவமதித்தவர்களை தண்டிக்க வாக்களிப்பீர் தாமரைக்கே.. டெல்லியில் மோடி பிரச்சாரம்
அமராவதி
சட்டசபை இருக்கும் தலைநகராக அமராவதியையும், நீதிமன்றங்களுக்கான தலைநகராக கர்னூலையும், நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினத்தையும் அறிவித்தார். இதற்கான சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் சட்டமேலவையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் நிறைவேறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெகன் சட்டமேலவையை கலைப்பதாக அதிரடியாக அறிவித்தார்.
மாநில அரசின் விருப்பம்
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் ஆந்திர அரசு மூன்று தலைநகரங்கள் விஷயம் குறித்து தெலுங்கு தேசம் எம்பி ஜெயதேவவ் கல்லா கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய், தலைநகரங்கள் அமைப்பது என்பது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் என்று அறிவித்தார்.
மத்திய அரசு தலையிடுமா
இதனிடையே விஜயவாடாவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் எம்.பி கேசனினி ஸ்ரீநிவாஸ் நாடாளுமன்றத்தில் தலைநகரங்கள் பிரச்சனை குறித்து மற்றொரு கேள்வி நாடாளுமன்றத்தில் எழுப்பினார். அப்போது அவர் பேசுகையில், "அமராவதியில் தலைநகரத்துக்காக ஆந்திராவில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார்களே மத்திய அரசு அறிந்திருக்கிறதா? அவர்களை போலீஸ் மிருகத்தனமாக தாக்குகிறதே அதை இந்த அரசு அறிந்திருக்கிறதா? தலைநகரத்தை விசாகப்பட்டினத்திற்கு மாற்றுவதை எதிர்த்து அமராவதியை சுற்றியுள்ள பல கிராமங்களில் பல வாரங்களாக போராட்டங்கள் நடந்து வருகிறது, இது குறித்து மாநில அரசு மத்திய அரசுக்கு ஏதேனும் தகவல் கொடுத்ததா? இந்த விவகாரத்தில் தலையிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா?" என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
விரும்பவில்லை
இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் நித்யானந்த் ராய், சட்டம் ஒழுங்கு என்பது ஒரு மாநில அரசு விவகாரம்., அரசு கோரினால், மத்திய அரசு கண்காணித்து படைகளை அனுப்புகிறது . ஆனால் ஆந்திர அரசிடம் இருந்து அரசுக்கு எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை. தலைநகர் விஷயத்தில் தலையிட மத்திய அரசு விரும்பவில்லை என்றார்.