லோக்சபாவில் நிறைவேறிய 3 விவசாய மசோதாக்கள்.. கொதித்தெழுந்த எதிர்க்கட்சிகள்.. சர்ச்சைக்கு காரணம் என்ன?
டெல்லி: மத்திய அமைச்சரவையில் இருந்து ஷிரோமணி அகாலி தளம் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் ராஜினாமா செய்த நிலையில், அவர் எதிர்த்த விவசாயம் தொடர்பான 3 மசோதாக்களும் லோக்சபாவில் இன்று நிறைவேறியது .
ஷிரோமணி அகாலி தளம் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.இது தொடர்பான கடிதத்தை நாடாளுமன்ற அலுவலகத்தில் அவர் அளித்துள்ளார்.
மத்திய அமைச்சரவையில் மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சராக இவர் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. விவசாயத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக கூறி அவர் தனது அமைச்சர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
இந்த ராஜினாமாவிற்கு மொத்தம் மூன்று சட்ட மசோதாக்கள் காரணம் ஆகும். இந்த மசோதாக்களை எதிர்த்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
விவசாயத்திற்கு எதிரான மசோதா.. மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் ராஜினாமா.. ஷிரோமணி அகாலி தளம் அறிவிப்பு!
மசோதா 1- விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக (பதவி உயர்வு மற்றும் வசதி) மசோதா, 2020;
மசோதா 2 - விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம், 2020
மசோதா 3- அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) மசோதா, 2020.
இதில் மசோதா 1 செவ்வாய் கிழமை வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட நிலையில், மீதம் உள்ள இரண்டு மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டு, வாக்கெடுப்பில் வென்றது. இந்த மசோதா சர்ச்சையாக பின்வரும் காரணங்கள் சொல்லப்படுகிறது.
விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக (பதவி உயர்வு மற்றும் வசதி) மசோதா, 2020;
இந்த மசோதா மூலம் அதிகார்பூர்வ விவசாய மார்க்கெட்கள், மண்டிகளுக்கு வெளியிலும் விவசாய பொருட்களை விற்க முடியும். குறிப்பிட்ட இடத்தில்தான் விவசாய பொருட்களை வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற நிலை போய், இனி எங்கும் வேண்டுமானாலும் இதை வர்த்தகம் செய்யலாம். அதேபோல் வெளியில் இப்படி செய்யப்படும் வர்த்தகத்திற்கு மார்க்கெட் வரி உள்ளிட்ட வரிகளை மாநில அரசுகள் பெற முடியாது. அதேபோல் இப்படி பொருட்களை விற்பனை செய்ய உரிய அனுமதி பெற வேண்டியது இல்லை.
ஏன் எதிர்ப்பு?
இதன் காரணமாக விவசாய துறையில் தனியார் நுழைய வாய்ப்புள்ளது. விவசாய பொருள் விற்பனையில் தனியார் வர வாய்ப்புள்ளது. தங்களுக்கு போதிய வருமானம் வராது என்று விவசாயிகள் கூறுகிறார்கள் . அதேபோல் இதனால் மாநிலங்களுக்கு செல்லும் வரியும் பறிபோகும் என்று மாநில கட்சிகள் கூறியுள்ளது.
விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம், 2020:
பண்ணை பொருட்களை உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும், அதை வாங்குவதையும் ஒழுங்குபடுத்த இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்று அரசு கூறியுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து அதன் மூலம் தங்கள் பண்ணை பொருட்களை விற்பனை செய்ய முடியும்.
ஏன் சர்ச்சை?
இந்த மசோதாவில் பண்ணை பொருட்களுக்கு விலை நிர்ணயம் என்ன என்று அறிவிக்கப்படவில்லை. இதனால் தனியார், கார்ப்பரேட் நிறுவனங்கள் பண்ணை பொருட்களை குறைந்த விலையில் கொள்முதல் செய்ய விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) மசோதா, 2020.
இந்த திருத்த மசோதா மொத்தமாக அத்தியாவசிய பொருட்களின் சந்தையை மாற்ற போகிறது. இதன் மூலம் தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்தே நீக்கப்படுகிறது.
இதனால் இந்த உணவுப் பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் இனிமேல் எந்த கட்டுப்பாடும் இருக்காது.
ஏன் சர்ச்சை?
இந்த பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் இதனால் பாதிக்கப்படுவார்கள். இவர்களால் சரியான விலைக்கு பொருட்களை விற்பனை செய்ய முடியும். தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விவசாயம் மொத்தமாக வீழ்ச்சி அடையும் என்று விவசாயிகள் குற்றச்சாட்டு வைத்து உள்ளனர்.
இந்த மசோதாவிற்கு எதிராக ஹரியானா, பஞ்சாப்பில் விவசாயிகள் பலர் தீவிரமாக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். ஒரு வாரதத்திற்கும் மேலாக அங்கு விவசாயிகள் தீவிரமாக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடுமையான போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், இந்த மசோதாக்கள் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு, வெற்றிபெற்றுள்ளது.