பிரதமர் இல்லம் கட்டும் பணிக்கான டெண்டர் மீண்டும் ரத்து.. மத்திய அரசு சொன்ன காரணம் என்ன?
டெல்லி : தலைநகர் டெல்லியில் பிரதமர் இல்ல கட்டுமான பணி டெண்டர் மீண்டும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் இல்லம் கட்டுவதற்கான டெண்டர் அக்டோபர் 1ஆம் தேதி மீண்டும் வெளியிடப்பட்ட நிலையில், மத்திய பொதுப்பணித்துறை நேற்று மீண்டும் டெண்டரை ரத்து செய்துள்ளது.
ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவன் அருகே ரூ.360 கோடியில் பிரதமர் இல்லம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது.
கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி மீண்டும் டெண்டர்களை மத்திய பொதுப்பணித்துறை வெளியிட்டது. ஆனால் இதுவும் ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தி: டெல்லியில் பிரதமர் மோடி, சோனியா காந்தி மரியாதை.. சென்னையில் ஆளுநர், முதல்வர் அஞ்சலி!
சென்ட்ரல் விஸ்டா திட்டம்
டெல்லியில் நாட்டின் அதிகார மைய கட்டிடங்களை புதிதாக அமைக்கும் சென்ட்ரல் விஸ்டா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம், பொது தலைமை செயலகம், புதிய துணை ஜனாதிபதி மாளிகை, புதிய பிரதமர் இல்லம், ராஜபாதை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. ராஜபாதை மறுசீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு அது திறக்கப்பட்டு விட்டது.
பிரதமர் இல்லம்
சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் மீதமுள்ள கட்டிடங்களின் பணிகளும் விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் புதிய பிரதமர் இல்லத்தை ஜனாதிபதி மாளிகைக்கு அருகே ரூ.360 கோடியில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டருக்கு கடந்த ஜூலை மாதம் 18-ஆம் தேதி மத்திய பொதுப்பணித்துறை அழைப்பு விடுத்திருந்தது.
மீண்டும் ரத்து
பின்னர் இது ஜூலை மாதம் 22-ஆம் தேதி நிர்வாக காரணங்கள் எனக் கூறி ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி மீண்டும் டெண்டர்களை மத்திய பொதுப்பணித்துறை வெளியிட்டது. ஆனால் இதுவும் ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவித்தது. நிர்வாக காரணங்களுக்காக இந்த டெண்டர் ரத்து செய்யப்படுவதாக மத்திய பொதுப்பணித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதை
அதேசமயம், புதிதாக கட்டப்படும் ஜனாதிபதி மாளிகையில் சுரங்கப்பாதை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. துணை ஜனாதிபதி மாளிகையில் இருந்து நாடாளுமன்ற கட்டிடத்துக்கு செல்லும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த சுரங்கப்பாதைக்கான பணிகள் 4 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான டெண்டரை மத்திய பொதுப்பணித்துறை நேற்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.