விவசாய கடனை தள்ளுபடி செய்யும் திட்டமில்லை.. மத்திய அரசு பிடிவாதம்
ரூ.4 லட்சம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
டெல்லி: 3 மாநிலங்களில் கிடைத்த அடி, 2019-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறத் தேவையான வேலைகளில் பாஜக அரசு இறங்கி விட்டது. அதேசமயம், விவசாயிகளுக்கான கடன் தொகையை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை என்று அது இன்று தெளிவுபடுத்தியுள்ளது.
5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் மக்கள் எந்த அளவுக்கு பாஜக மீது அதிருப்தியாக இருக்கிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக தெரிவித்து விட்டது.
பாஜகவின் இப்படி ஒரு சறுக்கலுக்கு முக்கிய காரணம், விவசாயிகளை கண்டுகொள்ளாமல் விட்டதுதான் என கூறப்பட்டது. கிராமப்புற விவசாயிகளை மத்திய அரசு ரொம்பவே வாட்டி எடுத்தது என்பதுதான் பிரதான குற்றச்சாட்டாகவும் வைக்கப்பட்டது.
கட்டாயத்தில் பாஜக
அதனால்தானோ என்னவோ, விவசாயிகளை கவருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற விவசாயிகளை சமாளித்தாக வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது.
கோரிக்கை பரிசீலனை
நாட்டில் 26.30 கோடி விவசாயிகள் இருக்கிறார்கள். இவர்களின் ஆதரவு வரப்போகிற தேர்தலின்போது பாஜகவுக்கு ரொம்பவே முக்கியம். அதனால், விவசாயிகள் ஏற்கனவே வேளாண் கடன் தள்ளுபடி அளிக்க வேண்டும் என்று சொன்ன கோரிக்கையை பரிசீலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
கொள்முதல் திட்டம்
ஆனால் அப்படி எந்த யோசனையும் இல்லை என்று லோக்சபாவில் மத்திய விவசாயத்துறை இணை அமைச்சர் புருஷோத்தம் ருபாலா கூறிவிட்டார். இதனால் மத்திய அரசு எந்த வகையில் விவசாயிகளை சமாளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரலாம் எனத் தெரிகிறது.
புதிய திட்டங்கள்
அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசு தனது பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. அதில் விவசாயத்துறை தொடர்பான பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெறக்கூடும் என்று தெரிகிறது. கிராமப்புறங்கள் மேம்பாடு மற்றும் விவசாயத்துறைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படலாம். பல்வேறு புதிய திட்டங்களையும் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது