சாலை விபத்துகளை தடுக்க அரசு அதிரடி.. டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவதை கட்டாயமாக்க திட்டம்
Recommended Video
டெல்லி: ரப்பருடன் சிலிகானை கலந்து உயர்தரமான டயர்களை தயாரிக்கவும், அவற்றில் நைட்ரஜன் வாயு நிரப்புவதை கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
டெல்லி அருகே யமுனா 6வழி அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்து 29 பேர் பலியாகினர். இது தொடர்பாக ராஜ்யசபாவில் பூஜ்ய நேரத்தில் துணை கேள்விகளை உறுப்பினர்கள் எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்து அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், "நொய்டா- ஆக்ரா இடையேயான யமுனா அதிவிரைவு சாலையில் நடந்த விபத்து துரதிஷ்டவசமானது. இந்த விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சாலை உத்தரப்பிரதேச அரசால் போடப்பட்டது. இந்த சாலை தேசிய நெடுஞ்சாலை அல்ல. இங்கு 2016ல் 133 விபத்துகளும், 2017ல் 147 விபத்துகளும், 2018ல் 11 விபத்துகளும் நடந்துள்ளன.
பொதுவாக நாடு முழுவதும் விபத்துகளை குறைக்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. விபத்தில் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாவதை தடுக்க 14 ஆயிரம் கோடியில் விபத்து தடுப்பு திட்டங்கள் வகுக்கப்ட்டுள்ளது.
வாகன டயர் தயாரிப்பாளர்கள் ரப்பருடன் சிலக்கானை கலந்து உயர்தரமாக டயர்களை தயாரிப்பதை கட்டாயமாக்க அரசு பரிசீலித்து வருகிறது. மேலும் டயர்களில் சாதாரண காற்றுக்கு பதில் நைட்ரஜன் வாயு நிரப்புவதை கட்டாயாக்கவும் பரிசீலித்து வருகிறோம்" என்றார்.
வாகனத்தை அதிக நேரம் ஓடடினால் டயர்களில் உள்ள காற்று மிகவும் சூடாகி வெடித்து விபத்து ஏற்படும் நிலை உருவாகிறது. இதனை தடுக்கவே ரப்பருடன் சிலிகானை கலந்து டயர்களை தயாரிக்கவும், அவற்றில் நைட்ரஜன் வாயு நிரப்புவதை கட்டாயமாக்க அரசு பரிசீலத்து வருகிறது. இப்படி செய்தால் டயர்கள் அதிக சூடு காரணமாக வெடிக்கும் வாய்ப்பு குறையும் என்பதால் விபத்துகளும் குறையும். எனவே தான் மத்திய அரசு இந்த திட்டத்தை முன்வைத்துள்ளது.