விலை உயர்வு எதிரொலி... வெங்காய இறக்குமதிக்கு விதிகள் தளர்வு... மத்திய அரசு அறிவிப்பு..!
டெல்லி: வெங்காய இறக்குமதி செய்வதற்கான விதிகளை வரும் டிசம்பர் 15-ம் தேதி வரை தளர்த்தியுள்ளது மத்திய அரசு.
தமிழகம் உட்பட இந்தியாவில் பல மாநிலங்களில் வெங்காயத்தின் விலை விறுவிறுவென உயர்ந்துள்ளது. இதனால் ஏழை எளியோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.
ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய் வரை விற்கப்பட்டதால் வெங்காய விலை உயர்வு நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மீண்டும் எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. அதனடிப்படையில் வெங்காய இறக்குமதிக்கான விதிகளில் தளர்வு அறிவித்துள்ளது மத்திய அரசு.
இந்தியாவிற்கு அதிகளவில் வெங்காயங்களை அனுப்பி வைப்பதற்காக வணிகர்களை தொடர்பு கொள்ளுமாறு எகிப்து உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.
வெங்காய விலை உயர்வு நேரடியாக சாமானியர்களை பாதிக்கும் என்பதால் அதன் விலையை கட்டுக்குள் வைக்க மேலு சில நடவடிக்கைகளை மத்திய அரசு வரும் காலத்தில் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே உள்நாட்டில் நிலவும் வெங்காய தட்டுப்பாடு காரணமாக வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கடந்த செப்டம்பர் 14-ம் தேதி தடை விதிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
இந்தியாவில் கர்நாடக, மஹாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் வெளிச்சந்தைகளை விட தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் பண்ணை பசுமைக் கடைகளில் வெங்காயம் விலை குறைத்து (ரூ.45) விற்கப்படுகிறது.