மத்திய அரசு அதிரடி! சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு வரிவிலக்கு.. விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை
டெல்லி: நாட்டில் சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
உக்ரைன் போர் காரணமாக அந்த இரு நாடுகள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கச்சா எண்ணெய் தொடங்கிய சில சமையல் பொருட்கள் வரை அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கி உள்ளது.
“அடுத்த 3 மாசத்துக்கான ஸ்கெட்ச் அண்ணாமலை கையில இருக்கு”- அடேயப்பா.. அவங்களை இறக்குறது இதுக்குத்தானா?
உலகில் சூரிய காந்தி உற்பத்தியில் முதன்மை இடத்தில் உள்ளது உக்ரைன். போர் காரணமாக அங்கிருந்து வரும் சூரிய காந்தி குறைந்துள்ளதால் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
எண்ணெய் விலை
சூரிய காந்தி உட்பட அனைத்து சமையல் எண்ணெய்களின் விலையும் நாட்டில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர். இதனிடையே உள்நாட்டில் விலையைக் குறைக்கும் நடவடிக்கையாக சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதிக்கு வரி விலக்கை மத்திய அரசு அறிவித்துள்ளது.
வரி விலக்கு
ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் இறக்குமதிக்குச் சுங்க வரி மற்றும் விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் வரி ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2022-23, 2023-24 ஆகிய நிதியாண்டுகளில் இந்த வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும் இந்த வரி விலக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் வரையிலான இறக்குமதிக்குப் பொருந்தும் என்று நிதி அமைச்சகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உதவும்
இந்த விலக்கு உள்நாட்டு விலையைக் குறைக்கவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்று கூறப்படுகிறது. பல்வேறு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது பொதுமக்களுக்குச் சற்றே உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேறு சில அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு தான், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைத்தது. அதேபோல எஃகு மற்றும் பிளாஸ்டிக் தொழிலில் பயன்படுத்தப்படும் சில மூலப்பொருட்களின் இறக்குமதி வரியையும் மத்திய அரசு குறைத்திருந்தது. அதேபோல உள்நாட்டுத் தேவையை முதலில் பூர்த்தி செய்யும் வகையில் இரும்புத் தாது மற்றும் இரும்புத் துகள்களுக்கான ஏற்றுமதி வரி உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம்
எரிபொருள் தொடங்கி காய்கறிகள் மற்றும் சமையல் எண்ணெய் வரை அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்ததால் கடந்த ஏப்ரல் மாதம் மொத்த விற்பனை பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்ந்தது. அதேபோல சில்லறை பணவீக்கம் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 7.79 சதவீதமாக உயர்ந்தது. இப்படித் தொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்கத்தால் ரிசர்வ் வங்கி பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை 40 புள்ளிகள் உயர்த்தி 4.40 சதவீதமாக நிர்ணயம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.