மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்பணம் ரூ.10000 - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.10000 வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
டெல்லி: நவராத்திரி, தீபாவளி பண்டிகைகள் வர உள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10000 பண்டிகை முன் பணம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பத்து மாதங்களில் மாதம் 1000 ரூபாய் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்றும் மத்திய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் 70 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனாவிற்கு மத்தியில் பண்டிகைகளும் வரிசையாக நிற்கின்றன. நவராத்திரி, தீபாவளி, தை திருநாள், மகரசங்கராந்தி என வரிசையாக இனி பண்டிகை காலம்தான். நாடு முழுவதும் ரேசனில் இலவச அரிசியும், கோதுமையும் மட்டும்தான் வழங்கப்படுகிறது. ஏழை நடுத்தர மக்களுக்கு இந்த ஆண்டு பண்டிகை எல்லாம் கொண்டாட்டங்கள் இன்றி சாதாரண நாளாகவே கடந்து விடும்.
இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் பண்டிகை கால முன்பணமாக வட்டியில்லாமல் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்தப் பணத்தை மாதம் ரூ.1,000 வீதம் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், நாட்டின் பொருளாதாரத்தில் தேவையைத் தூண்டும் வகையிலும், நுகர்வோரின் செலவு செய்யும் பழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும் மத்திய அரசு ஊழியர்களுக்குப் பண்டிகை கால முன்பணம் வழங்கப்படுகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 6 வது ஊதியக்குழுவில் பண்டிகை கால முன்பணம் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டாலும், பொருளாதாரச் சூழல் கருதி மீண்டும் வழங்கப்படுகிறது. இதன்படி மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் பண்டிகை கால முன்பணமாக ரூ.10 ஆயிரம் வட்டியில்லாமல் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
விவசாய சட்டங்கள்... விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!!
இந்த ரூ.10 ஆயிரம் என்பது ரூபே ப்ரீபெய்ட் கார்டில் வழங்கப்படும். இந்த கார்டில் உள்ள தொகையை 2021, மார்ச் 31ஆம் தேதி வரை செலவு செய்ய முடியும். இந்த ரூ.10 ஆயிரத்தை ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதம் ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்குப் பிடித்தம் செய்யப்படும். இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.4 ஆயிரம் கோடி செலவிடுகிறது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டு மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து விட்டது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்து போனதால் பொருளாதாரத்தில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. நுகர்வோர் செலவு செய்யும் அளவு குறைந்து வருவதால் பொருட்களின் தேவையின் அளவு குறைந்து வருகிறது. இதை உயர்த்த மத்திய அரசு அதிகமான வரிச்சலுகைகளை வழங்க வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்தினர்.
நுகர்வோர்கள் செலவு செய்யும் அளவை அதிகரித்தால்தான் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்பதை அறிந்து மத்திய அரசு தற்போது பண்டிகை கால முன்பணத்தை மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏழை, நடுத்தர மக்களுக்கு பண்டிகை கால சலுகையாக மத்திய அரசு அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.