ராம்தேவின் கொரோனா மருந்து விளம்பரத்துக்கு மத்திய அரசு அதிரடி தடை- உடனே நிறுத்த உத்தரவு!
டெல்லி: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறி பதஞ்சலி நிறுவனம் விளம்பரப்படுத்துவதை உடனே நிறுத்த வேண்டும் என்று ராம்தேவுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் 4வது இடத்தில் இந்தியா உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் 4,45,012 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 14,078 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
3 டூ 15 நாள்தான்.. கொரோனா ஓடிரும்.. குணமாய்ருவீங்க.. இதுதான் மருந்து.. சொல்கிறார் ராம்தேவ்
100% குணப்படுத்தும் மருந்து
கொரோனாவுக்கான மருந்தை உலக நாடுகள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் யோகா குரு எனப்படும் ராம்தேவ், தமது பதஞ்சலி நிறுவனம் மூலம் கொரோனாவை 100% குணப்படுத்துகிற மருந்தை கண்டுபிடித்துவிட்டோம் என அறிவித்தார். இதற்குப் பெயர் கொரோனில் ஸ்வாசரி. இதன் விலை ரூ545 என்று அறிவித்தார் ராம்தேவ்.
ராம்தேவ் அறிவிப்பால் வெடித்த சர்ச்சை
தமிழகத்தில் ஏற்கனவே சித்த மருத்துவத்தின் மூலம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன; சித்த மருத்துவத்தை பயன்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் அரசு அங்கீகாரம் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையானது.
மத்திய அரசு அதிரடி உத்தரவு
அதுவும் 280 நோயாளிகளுக்கு தங்களது மருந்தை செலுத்தி பரிசோதித்து பார்த்துவிட்டோம். இதற்கு முறையான அனுமதியும் பெற்றுவிட்டோம் என்றும் ராம்தேவ் கூறியிருந்தார். ராம்தேவின் இந்த அறிவிப்பு வெளியான நிலையில் மத்திய அரசு அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
விளம்பரம் செய்ய தடை
அதில், பதஞ்சலி நிறுவனத்தின் ஆயுர்வேத மருந்துகள் பற்றிய தகவல்களை மத்திய அரசு பெற்றிருக்கிறது. பதஞ்சலி நிறுவனம் தன்னுடைய மருந்து விவரங்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கொரோனா மருந்து தொடர்பான உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதுவரை பதஞ்சலி நிறுவனம் கொரோனா மருந்து தொடர்பான விளம்பரத்தை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
மத்திய அரசின் அறிகை
மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: உத்தரகண்ட் ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட், கோவிட்-19 நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆயுர்வேத மருந்துகளைத் தயாரித்துள்ளதாக ஊடகங்களில் சமீபத்தில் வெளியான செய்திகளை, மத்திய ஆயுஷ் அமைச்சகம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. இவ்வாறு கூறியிருப்பதன் உண்மை விவரங்கள் குறித்தும், அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது போல அறிவியல் பூர்வமான ஆய்வு பற்றிய விவரங்கள் குறித்தும் அமைச்சகத்துக்கு தெரியவரவில்லை.
விளம்பரங்களுக்கு கட்டுப்பாடுகள்
ஆயுர்வேதிக் மருந்துகள் உட்பட அனைத்து மருந்துகள் தொடர்பான இதுபோன்ற விளம்பரங்கள், மருந்துகள் மற்றும் ஆட்சேபத்துக்குரிய மேஜிக் நிவாரண விளம்பரங்கள் சட்டம் 1954 மற்றும் விதிமுறைகள்; கோவிட் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள பல்வேறு உத்தரவுகள்; ஆகியவற்றால் கட்டுப்படுத்தப் பட்டவை என்று சம்பந்தப்பட்ட ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவிக்கை வெளியீடு
ஆயுஷ் சிகிச்சை முறை மருந்துகள் மூலமாக நடத்தப்படும் கோவிட்-19 பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய விதிமுறைகள்; அதற்கான தேவைகள் ஆகியவை குறித்து 21 ஏப்ரல் 2020 தேதியிடப்பட்ட அரசிதழ் அறிவிக்கை எண் No. L.11011/8/2020/AS உத்தரவும் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
பதஞ்சலி நிறுவனத்துக்கு உத்தரவு
மேற்குறிப்பிட்ட செய்தியின் விவரங்கள், அதில் கூறப்பட்ட விஷயங்கள் குறித்து அமைச்சகத்திற்கு தெரியப்படுத்துவதற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் விரைவில் கோவிட் சிகிச்சைக்கான மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறப்படும் மருந்தின் பெயர், மூலக்கூறுகள், கோவிட்-19 சிகிச்சை ஆய்வு/ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட இடங்கள்/மருத்துவமனைகள், அதற்கான ஒப்பந்தங்கள், விதிமுறைகள், ஆய்வு மாதிரி அளவு, இன்ஸ்டிடியூஷனல் எதிக்ஸ் கமிட்டி ஒப்புதல்; CTRI பதிவு, ஆராய்ச்சி/ஆராய்ச்சிகளின் புள்ளிவிவர முடிவுகள் ஆகியவற்றை அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
விளம்பரங்களை நிறுத்த வேண்டும்
இந்த விஷயம் குறித்து முறையாகப் பரிசீலிக்கப்படுவது வரை இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடுவதையும், இவை குறித்து பிரசுரிப்பதையும் நிறுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கோவிட் சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்து கண்டுபிடித்து விட்டதாகக் கூறப்படுவதற்கு மருந்துப் பொருள் ஒப்புதல் அதற்கான உரிமங்கள் ஆகியவற்றின் நகல்களை அளிக்குமாறு உத்தரகண்ட் அரசின் மாநில உரிமங்கள் அமைப்பை, அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது இவ்வாறு ஆயுஷ் அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.