'அந்த 34 மாவட்டங்கள்..' உச்சபட்ச கவனம் தேவை, அலட்சியம் வேண்டாம்.. எச்சரிக்கும் மத்திய அரசு
டெல்லி: இந்தியாவில் கொரோனா 3ஆம் அலை குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கொரோனா அச்சம் இன்னும் முழுமையாக விலகாத நிலையில், அலட்சியத்திற்கு இடமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது கொரோனா வைரஸ் தான். கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் பல்வேறு நாடுகளும் திணறி வருகின்றன.
அதில் இந்தியா ஒன்றும் விதிவிலக்கு அல்ல. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை உச்சம் தொட்டது. தினசரி வைரஸ் பாதிப்பு 4 லட்சம் வரை கூட சென்றது.
நிமிடத்திற்கு 48,000.. ஒரே நாளில் 2.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி! சீன சாதனையை முறியடித்த இந்தியா
கொரோனா பாதிப்பு
இப்போது தான் நாட்டில் கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ளது. கேரளாவில் இடையில் ஓணம் பண்டிகைக்குப் பின்னர் வைரஸ் பாதிப்பு மளமளவென அதிகரித்தது. அதுவும் சில வாரங்களில் கட்டுக்குள் வந்தது. இப்போது வேக்சின் பணிகளில் மத்திய அரசு முழு மூச்சாக ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் அனைவருக்கும் வேக்சின் போட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா நிலை குறித்தும் அதைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் இன்று உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில அரசுகள் சார்பிலும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அலட்சியம் கூடாது
சமூகத்தில் கொரோனா அச்சம் இன்னும் முடியாத நிலையில் அலட்சியத்திற்கு இடமில்லை என்று தெரிவித்த செயலாளர் ராஜீவ் கவுபா, கொரோனா வழிகாட்டுதல்களைப் பொதுமக்கள் முறையாகப் பின்பற்றுவதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்றார். உலகின் இதர நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதைக் குறிப்பிட்ட அவர், இந்தியாவிலும் சில பகுதிகளில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் அதிகமாக உள்ளது கவலையை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார். மாநில அரசுகள் கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கூறிய அவர், அனைத்து மாநிலங்களும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் அத்தியாவசிய மருந்துகளைச் சேமித்து வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
ராஜேஷ் பூஷன்
இந்த கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், "11 மாநிலங்களில் டெங்கு செரோடைப் -2 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது மற்ற வகைகளை விட அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும். டெங்குவை முன்கூட்டியே கண்டறிவது, மருந்துகள் உள்ளிட்டவை மூலம் டெங்கு பாதிப்பை மாநிலங்கள் முறையாகக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், கொசுக்களைக் கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும். அதேபோல அனைத்து ரத்த வகைகளும் தேவையான அளவு இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
34 மாவட்டங்கள்
தற்போது, 15 மாநிலங்களில் 70 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு கவலைக்குரியவை ஆக உள்ளது. 34 மாவட்டங்கள் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 10%க்கும் அதிகமாகவும், 36 மாவட்டங்களில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 5%-10% ஆகவும் உள்ளது. வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, ஒரே இடத்தில் அதிக அளவிலான பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்க அனைத்து மாநிலங்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகரித்தால், உடனடியாக தேவையான கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும்.
மருத்துவ உட்கட்டமைப்பு
அனைத்து மாநில அரசுகளுக்கும் Emergency COVID-19 Response Packageஇன் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் முறையாகப் பயன்படுத்த வேண்டும். அதேபோல அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களும் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்த வேண்டும். மருத்துவ உட்கட்டமைப்பு போதிய அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் " என்றும் அவர் தெரிவித்தார்.