எகிறிய செலவு.. லோக்சபா ராஜ்யசபா டிவி சானல்களை இணைக்க மத்திய அரசு முடிவு
டெல்லி: மத்திய அரசால் நிர்வகிக்கப்பட்டுவரும் மக்களவை மற்றும் மாநிலங்களவை தொலைக்காட்சிகளை ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு நிர்வகித்துவரும் இந்த தொலைக்காட்சிகளில் மக்களவை மற்றும் மாநிலங்களவைகளின் நிகழ்ச்சிகள் நேரடியாக வழங்கப்பட்டு வந்தநிலையில், தற்போது இந்த இரு தொலைக்காட்சிகளையும் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைப்பிற்கு குறிப்பிட்ட காரணங்கள் கூறப்படவில்லை என்றாலும், வரவிற்கு மேல் செலவு ஏற்பட்டு வருவதால், அதை குறைக்கும் நடவடிக்கையே இது என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் உ.பி. தலைமைச் செயலாளர், டிஜிபி.. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை சந்திக்கிறார்கள்!
ஒருங்கிணைக்க மத்திய அரசு முடிவு
மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் லோக்சபா மற்றும் ராஜ்யசபா டிவிக்களை ஒருங்கிணைக்க உள்ளதாக ராஜ்யசபா பொதுச் செயலாளர் தேஷ் தீபக் வர்மா தெரிவித்துள்ளார்.
செலவை குறைக்க நடவடிக்கை
இந்த ஒருங்கிணைப்பிற்கு எந்தவிதமான காரணங்களையும் மத்திய அரசு கூறாவிட்டாலும், இந்த சேனல்களின் செலவு வருமானத்தைவிட அதிகமாக இருப்பதால், செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக இந்த முயற்சி எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா நிகழ்ச்சிகள் தடையின்றி ஒளிபரப்பு
நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை எந்தவித தடைகளும் இன்றி நேரடியாக ஒளிபரப்பும்வகையில் கடந்த 2006 ஜூலை மாதத்தில் துவங்கப்பட்ட லோக்சபா டிவி, மக்களவை செயலாளரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதேபோல ராஜ்யசபா டிவியும் மாநிலங்களவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிப்பரப்பி வருகிறது.
ஒருங்கிணைக்கும் முயற்சி
முதலில் இந்த இரு தொலைக்காட்சிகளையும் நீக்கிவிட்டு புதிதாக ஒரு சேனலை துவக்கவே திட்டமிடப்பட்டதாகவும், ஆனால், பின்பு அந்த திட்டம் கைவிடப்பட்டு, இரு தொலைகாட்சிகளையும் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கண்காணிக்க குழு அமைப்பு
இந்த ஒருங்கிணைப்பு திட்டத்தை பிரதமர் அலுவலகம் மற்றும் இதற்கென அமைக்கப்பட உள்ள குழு தீவிரமாக கண்காணிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கு மத்திய அமைச்சரவையின் பிரதிநிதி ஒருவர் தலைவராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.