நாகாலாந்து மீண்டும் பதற்றப் பகுதியாக பிரகடனம்- ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு
டெல்லி: நாகாலாந்து மாநிலம் முழுவதும் மீண்டும் பதற்றப் பகுதியாகவும் ஆபத்து நிறைந்த பகுதியாகவும் மத்திய அரசால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
நாகாலாந்து இந்தியாவுடன் இணைக்கப்பட்டது முதலே கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தனிநாடு கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஆயுதப் போராட்டங்களும் நடைபெற்றன.
நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக் மூய்வா) பிரிவினர் இந்த தனிநாடு போராட்டத்தை நடத்தினர். பின்னர் மத்திய அரசு இந்த அமைப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
சிதைக்கப்பட்ட 'நாகாலாந்து நாடு'.. சட்டசபை தேர்தல் புறக்கணிப்பின் பின்னணியில் 70 ஆண்டுகால 'யுத்தம்'
படையினருக்கு சிறப்பு அதிகாரம்
நாகா இனமக்கள் வசிக்கும் பிற மாநிலப் பகுதிகளையும் ஒருங்கிணைத்து நாகாலிம் எனப்படும் அகன்ற நாகாலாந்து எனும் நாடு உருவாக்க வேண்டும் என்பதே பிரிவினைவாத அமைப்புகளின் கொள்கை. இதை ஒடுக்கும் வகையில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் - AFSPA சட்டம் அமலில் இருக்கிறது.
AFSPA சட்டம்
பிரிவினைவாதம் கோரி ஆயுதப் போராட்டம் நடைபெறும் மாநிலங்களில் இந்த AFSPA சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப இந்த AFSPA சட்டம் திரும்பப் பெறப்பட்டும் உள்ளது. மேகாலயா, அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் AFSPA திரும்பப் பெறப்பட்டிருக்கிறது.
மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு
பாதுகாப்புப் படையினர் எந்தவித அனுமதியும் இல்லாமல் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளவும் கைது செய்யவும் வகை செய்யும் AFSPA சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்பது குற்றச்சாட்டு. இந்த AFSPA சட்டத்தை மணிப்பூரில் வாபஸ் பெற வேண்டும் என்பதற்காக இரோம் சர்மிளா என்ற சமூக செயற்பாட்டாளர் 20 ஆண்டுகாலம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். தற்போது நாகாலாந்தில் AFSPA சட்டத்தை நீட்டிக்கும் வகையில் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது.
நாகாலாந்தில் 6 மாதத்துக்கு நீட்டிப்பு
இது தொடர்பான அறிவிக்கையில், ஒட்டுமொத்த நாகாலாந்து மாநிலமும் பதற்றப் பகுதியாகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் பிரகடனம் செய்யப்படுகிறது. ஆகையால் AFSPA சட்டம் வரும் மேலும் 6 மாதங்களுக்கு அதாவது டிசம்பர் 31-ந் தேதி வரை இம்மாநிலத்தில் அமலில் இருக்கும் என்று மத்திய அரசின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது வழக்கமாக மத்திய அரசு மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.