இந்த வருஷம் கொரோனாவால் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி பங்கு தரலை.. அப்ப போன வருஷ தாமதத்துக்கு என்ன காரணம்!
டெல்லி: ஜிஎஸ்டி வரி நிலுவைத் தொகையை மாநிலங்களுக்கான இந்த ஆண்டு வழங்காமல் இருக்க கொரோனாவை காரணம் காட்டி வருகிறது மத்திய அரசு. ஆனால் கொரோனா பாதிப்பே இல்லாத கடந்த ஆண்டும் கூட ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு மிக மிக தாமதமாகவே மாநிலங்களுக்கு கொடுத்தது.
ஜிஎஸ்டி வரி வருவாயில் 14% மாநிலங்களுக்கு மத்திய அரசு திருப்பித் தர வேண்டும். ஆனால் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தராமல் இழுத்தடிப்பது மிகப் பெரிய சிக்கலாகி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரும் சரிவை எதிர்கொண்டு வருகிறது. இது ஜிஎஸ்டி வரி வருவாயிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ 98,203 கோடி ஆக இருந்தது.
வாட்ஸ் ஆப்பை விட நவீன செயலியை உருவாக்கிய திண்டுக்கல் மாணவன்.. பிளே ஸ்டோரில் "ஆட்" செய்த கூகுள்
கோவா ஜிஎஸ்டி மாநாடு
செப்டம்பரில் ரூ91,917 கோடியாக குறைந்த ஜிஎஸ்டி வருவாய் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பண்டிகைக்காலங்கள் என்பதால் அதிகரித்தது. அக்டோபரில் ரூ95,380 கோடியாக அதிகரித்தது ஜிஎஸ்டி வரி. கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற 37வது ஜிஎஸ்டி மாநாட்டிலும் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி பங்கு தாமதமாவது குறித்து விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய அரசு வழக்கம் போல உறுதிமொழிகளை அளித்து வந்தது.
மிக மிக தாமதம்
பின்னர் ஒருவழியாக 2019 ஆகஸ்ட்- செப்டம்பர் மாதத்துக்கான ரூ35,298 கோடியை மாநிலங்களுக்கு டிசம்பர் மாதம்தான் மத்திய அரசு செட்டில் செய்தது. பின்னர் 2019-ம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களுக்கான தொகையான ரூ34,053 கோடியை மாநிலங்களுக்கு கடந்த பிப்ரவரிமாதம் தான் மத்திய அரசு இரு தவணைகளாக பிரித்து கொடுத்தது.
தவணை தவணையாக செட்டில்
இதனைத் தொடர்ந்து நடப்பு ஜூன் மாதத்தில் 2019-ம் ஆண்டு டிசம்பர்- 2020 பிப்ரவரிக்கான நிலுவைத் தொகை ரூ36,400 வழங்கப்பட்டது. மார்ச் மாதத்துக்கான நிலுவைத் தொகை ரூ13,806 கோடியும் கூட ஜூலை மாதத்தில்தான் மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டது. நடப்பு 2020 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு மொத்தம் ஜிஎஸ்டி வரியில் ரூ1.65 லட்சம் கோடி தர வேண்டியுள்ளது.
கொரோனா காரணமாம்
இப்படி கொரோனா பாதிப்பே இல்லாத கடந்த ஆண்டுக்கான ஜிஎஸ்டி வரி வருவாயையே மாநிலங்களுக்கு ஏதோ பார்த்து போடுவது போல மத்திய அரசு செட்டில் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது திடீரென எல்லாவற்றுக்குமே கொரோனாவே காரணம் என்பதாக ஒரு மாய பிம்பத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.
கோர்ட்டுக்கு போகும் கேரளா
இதனால்தான் ஜிஎஸ்டி வரிவருவாயை மாநிலங்களுக்கு உடனே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்த பாஜக அல்லாத 7 மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட்டியிருந்தார். இதேநிலைமை நீடித்தால் உச்சநீதிமன்றத்துக்கு போக நேரிடும் என இடதுசாரிகள் ஆளும் கேரளா மாநில அரசும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.