மத்திய அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்தால் ஓய்வுக்கு பிறகு பதவியா?லோக்சபாவில் தயாநிதி மாறன் கேள்வி
டெல்லி: மத்திய அரசுக்கு சாதகமான தீர்ப்பு கொடுத்தால் பணி ஓய்வுக்குப் பிறகு பதவி வழங்கப்படுவதாக லோக்சபாவில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் குற்றம்சாட்டினார். மேலும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீப் பானர்ஜி பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
லோக்சபாவில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஊதியம் மற்றும் பணி நிலைமை தொடர்பான திருத்த மசோதா மீது நேற்று விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசியதாவது:
ஆர்.எஸ் பாரதி, திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் ரத்து
நீதித்துறையில் செல்வாக்கு
நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். ஆனாலும் அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகள் மக்களிடம் பல சந்தேகங்களை எழுப்பி இருக்கின்றன. நீதித்துறையில் ஆட்சியாளர்கள் செல்வாக்கு செலுத்துவதாக மக்களுக்கு சந்தேகம் உள்ளது. ஆட்சியில் இருப்பவர்கள் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துவிடக் கூடாது என்பதே எங்களது வேண்டுகோள்.
ஓய்வுக்குப் பிறகு பதவியா?
மத்திய அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்குகிற நீதிபதிகளுக்கு பணி ஓய்வு காலத்துக்குப் பிறகு பதவிகள் வழங்கப்படுகின்றன. உச்சநீதிமன்ற நீதிபதிகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஆளுநர்கள் மற்றும் எம்.பிக்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய இருவர் பணிகாலத்துக்குப் பிறகு ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டார்; மற்றொருவர் ராஜ்யசபா எம்.பியாக்கப்பட்டார். உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டு ஆளுநராக பதவி வகிக்கும் ஒருவர் ஓய்வூதியத்தை எந்த பதவியின் கீழ் பெறுவார்? அதாவது உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த ஒருவர், ராஜ்யசபா எம்.பி.யாகும் போது அல்லது ஆளுநராகும் போது உச்சநீதிமன்ற நீதிபதிக்கான ஓய்வூதியத்தைப் பெறுவாரா? ராஜ்யசபா எம்.பிக்கான அல்லது ஆளுநருக்கான ஓய்வூதியத்தைப் பெறுவாரா? இந்த சூழலில் அவர் இறுதியாகப் வகித்த பதவிக்கான ஓய்வூதியத்தையே பெற வழிவகை செய்ய வேண்டும்.
நீதித்துறை ஆதிக்கம்
உச்சநீதிமன்றம் பன்முகத் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் இல்லை. நாடு விடுதலை அடைந்து 71 ஆண்டுகளாகியும் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் தலித்துகள் 5 பேர்தான் இதுவரை நீதிபதிகளாகப் பணியாற்றி இருக்கின்றனர். உச்சநீதிமன்றத்தில் பெண்களுக்கும் போதுமான பிரதிநிதித்துவம் கிடையாது. இந்திய நீதிமன்றங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்துகிற நிலை உள்ளது. நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டும். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ஓய்வு பெறும் வயதை ஒரே மாதிரியாக நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.
நிலுவையில் உள்ள வழக்குகள்
இந்த விவாதத்தின் போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி பேசியதாவது: உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பாக 272 வழக்குகளும், 7 நீதிபதிகள் கொன்ட பெஞ்ச் முன்பாக 15 வழக்குகளும், 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பாக 135 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. பாஜகவைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் ஆஜராகும் வழக்குகள் ராக்கெட் வேகத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. நீதிமன்றங்களின் நிர்வாக நடவடிக்கைகள் நாடாளுமன்றத்துக்கு பதிலளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். நீதித்துறையில் மேற்கொள்ளப்படுகிற நியமனங்களைவிட காலிப் பணியிடங்களே அதிகமாக உள்ளன.
சஞ்சீப் பானர்ஜி மாற்றம் ஏற்புடையது அல்ல
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீப் பானர்ஜி, மேகாலயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்ட விதம் ஏற்புடையது அல்ல. தேர்தல் ஆணையத்தை விமர்சித்த காரணத்தாலேயே சஞ்சீப் பானர்ஜி மேகாலயா மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். இந்திய நீதித்துறையில் ஆகச் சிறந்த நீதிபதியாக திகழ்வர் சஞ்சீப் பானர்ஜி. இந்த மாற்றத்தால் அவருக்கு எந்த இழப்பும் இல்லை. ஆகையால் சஞ்சீப் பானர்ஜியின் மாற்றத்தை கொலீஜியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு கல்யாண் பானர்ஜி கூறினார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி கீதா விஸ்வநாத், ஜேடியூ, பிஜூ ஜனதா தளம் எம்.பிக்கள், கொலீஜியம் நடைமுறை குறித்து விமர்சனங்களை முன்வைத்தனர்.