7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு
டெல்லி: 7 மணி நேரமாக நீடித்து வந்த விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்குமான பேச்சுவார்த்தை முடிந்தது. இதில் சுமூக உடன்பாடு எட்டப்படாததால் டிசம்பர் 5-ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானாவை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் 35-க்கும் மேற்பட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டன.
இந்த விவசாயிகளுக்கு ஆதரவு கரம் நீட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் விவசாயிகள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். இந்த நிலையில் கடந்த 1-ஆம் தேதி மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நரேந்திர சிங் டோமர், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் விவசாய சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்த நடத்தினர்.
அதில் சுமூக உடன்பாடு எட்டப்படாததால் இன்றைய தினம் மீண்டும் விவசாயிகளுக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சுமார் 7 மணி நேரமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தற்போது முடிந்தது.
இதில் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் டோமர் விவசாயிகளிடம் கூறுகையில் வேளாண் சட்டம் குறித்த உங்கள் கவலைகள் சரியானது. வேளாண் உற்பத்தி மார்க்கெட் கமிட்டியை வலுப்படுத்துவோம். அதே போல் குறைந்தபட்ச ஆதார விலையில் எந்த மாற்றமும் செய்ய மாட்டோம் என விவசாயிகளுக்கு அமைச்சர் டோமர் உறுதியளித்தார்.
ஆனால் விவசாயிகளோ, குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் அளிக்க தேசம் முழுவதும் ஒரே சட்டம் ஏற்படுத்த வேண்டும். அந்த விலையை விட குறைவாக யாரேனும் பொருளை வாங்கினால் அவர் மீது நடவடிக்கை எடுக்க சட்டமும் கொண்டு வர வேண்டும் என்றனர்.
உங்க சாப்பாடு வேண்டாம்- கொண்டு வந்துட்டோம்- ஆம்புன்சில் டீ- மத்திய அரசுக்கு விவசாயிகள் பொளேர் பதில்
வேளாண் சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வர அரசுத் தயார் என அமைச்சர் டோமர் கூறினார். ஆனால் விவசாயிகளோ திருத்தங்கள் வேண்டாம், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யுங்கள் என கேட்டுக் கொண்டனர். இதையடுத்து வரும் டிசம்பர் 5-ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட விவசாய சங்க பிரதிநிதிகளில் ஒருவரான ஹர்ஜிந்தர் சிங் தண்டா கூறுகையில் இன்றைய ஆலோசனை ஆக்கப்பூர்வமாக இருந்தது. எனினும் முடிவு எட்டப்படவில்லை. எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. புதிய சட்டங்கள் தவறானது. அடுத்த கூட்டத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். புதிய சட்டங்களை திரும்ப பெறுவோம் என அரசு சொல்ல வேண்டும். நாளை மறுநாள் நடைபெறும் சந்திப்பில் அதை அரசு சொல்லும் என நம்புகிறேன் என்கிறார்.