விவசாயிகளுடன் இன்று ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை... விவசாய சட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து ஆலோசனை
டெல்லி: மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இன்று நடைபெறும் ஏழாம்கட்ட பேச்சுவார்த்தையில் விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவது குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளது.
மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் மூன்று புதிய விவசாய சட்டங்களை அறிமுகம் செய்தது. இருப்பினும், இவை விவசாயிகளின் உரிமைகளைப் பிடுங்கி, காப்ரேட்களுக்கு அளிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் 41ஆவது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அமைச்சர் சதானந்த கவுடா திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
பேச்சுவார்த்தை
மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஐந்து கட்ட பேச்சுவார்த்தைகளில் எவ்வித சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை. விவசாயிகள் தலைநகரில் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து கடந்த வாரம் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
50% உடன்பாடு
இந்தப் பேச்சுவார்த்தையில் விவசாயிகள் முன்வைக்கும் நான்கு கோரிக்கைகளில் இரண்டில் சுமுகமான உறவு எட்டப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. அதாவது விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின் கட்டண உயர்வு மற்றும் விவசாய கழிவுகளை எரிக்க விதிக்கப்படும் அபராதம் ஆகிய பிரச்சினைகளில் அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.
விவசாயிகள் மறுப்பு
இருப்பினும், மத்திய அரசின் இந்தத் தகவலை விவசாயிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். மேலும், இதுவரை மத்திய அரசு எந்த பிரச்சினைக்கும் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கவில்லை என்று விவசாயச் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். எழுத்துப்பூர்வமாக உறுதியை அளிக்காமல் அரசு மக்களுக்குப் பொய்யான தகவல்களை அளிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை
இந்த இக்கட்டான சூழ்நிலையில், மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இன்று ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதில் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்தும், விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.
விவசாயிகள் எச்சரிக்கை
முன்னதாக, மத்திய அரசு தங்கள் கோரிக்கைகளை ஏற்று விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியை டிராக்டர்களை கொண்டு முற்றுகையிட்டு மிகப் பெரிய பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளின் போராட்டத்திற்குக் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.