ரபேல் ஒப்பந்தம்.. விமானத்தின் உண்மையான விலை என்ன? உச்ச நீதிமன்றத்தில் அனல் பறந்த விவாதம்!
ரபேல் ஒப்பந்தத்தில் விமானங்கள் எந்த விலைக்கு வாங்கப்பட்டது என்ற விவரங்களை தாக்கல் செய்ய முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்து இருக்கிறது.
Recommended Video
டெல்லி: ரபேல் ஒப்பந்தத்தில் விமானங்கள் எந்த விலைக்கு வாங்கப்பட்டது என்ற விவரங்களை தாக்கல் செய்ய முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்து இருக்கிறது.
ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த விசாரணையை நடத்தியது.
இதில் மத்திய அரசிடம் நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினார்கள். ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விமான படை அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
[விமானப்படை அதிகாரிகள் நீதிமன்றம் வர வேண்டும்.. ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி]
யார் தொடுத்த வழக்கு
ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் பொதுநல வழக்கு தொடுத்தனர். ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து இருக்கிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை பொதுவில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தங்கள் மனுவில் குறிப்பிட்டனர். மேலும் நீதிமன்ற கண்காணிப்பில் இந்த ஊழல் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இருந்தனர்.
எந்த விவரமும் இல்லை
இந்த நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி நேற்று முதல்நாள் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான பத்திரங்களை அரசு உச்ச நீதிமன்றத்தில் 14 பக்க அறிக்கையாக தாக்கல் செய்தது. ஒப்பந்தம் குறித்து ஏற்கனவே பலருக்கும் தெரிந்த அடிப்படை விஷயங்கள் மட்டுமே இதில் அடங்கி இருக்கிறது. ஆனால் இதில் மிக முக்கியமான விஷயங்கள் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.
எவ்வளவு விலை
இந்த நிலையில் இந்த ஒப்பந்தம் எவ்வளவு ரூபாய்க்கு செய்யப்பட்டது, ஒரு விமானம் எவ்வளவு ரூபாய்க்கு வாங்கப்பட்டது என்று விலை விவரங்களை மனுதாரர் தரப்பு கேட்டு இருந்தது. காங்கிரஸ் ஆட்சியின் போது 126 விமானங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தின் முடிவில் பாஜக மூலம் இப்போது 36 விமானங்கள் மட்டுமே வாங்கப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் கூறிய விலைக்கு வாங்கி இருந்தால் மொத்தமாக 126 விமானங்களை ரூ 41,212 கோடிக்கு வாங்கி இருக்கலாம். ஆனால் இப்போது 36 விமானங்களை வாங்கவே 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகி உள்ளது. இதனால் பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று மனுதாரர் தரப்பு கூறியது.
விலைக்கு மறுப்பு
இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது. அதாவது மனுதாரர் தரப்பு அளிக்கும் விலை விவரங்கள் சரியானது கிடையாது. உண்மையான விலை விவரங்களை அளிக்க முடியாது. அப்படி விலை விவரங்களை அளித்தால் அது இந்தியா பாதுகாப்பிற்கு பிரச்சனை ஆகும். இது ராணுவ பாதுகாப்பு தொடர்பானது என்று மத்திய அரசு கூறியது.
ஆனால் என்ன நடந்தது
இதற்கு மனுதாரர் பிரஷாந்த் பூஷன் தரப்பு, மேலே குறிப்பிட்ட விலை விவரங்கள் நாங்களாக சொல்வது இல்லை. மத்திய அரசின் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் அளித்த தகவல்தான் இது. நீங்கள்தான் இந்த விலை விவரங்களை 4 முறைக்கும் மேல் கூறியுள்ளீர்கள். நாங்கள் அதை முறையான அறிக்கை விவரமாக கேட்கிறோம் என்று கூறியது.
பிரான்ஸ் ஒப்பந்தம்
இதை ஏற்றுக்கொள்ளாத மத்திய அரசு, விலை விவரங்களை அளிக்க முடியாது. பிரான்ஸ் ஒப்பந்தத்தின்படி விலை விவரங்களை வெளியே அளிக்க கூடாது. பிரான்ஸ் அனுமதியுடன் மட்டுமே ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விலை விபரங்களை அளிக்க முடியும் என்று கூறியது.
மீண்டும் வாதம்
இதையடுத்து மனுதாரர் தரப்பு தனது வாதத்தில், பிரான்ஸ் ஒப்பந்தம் ராணுவ ரகசியம் பற்றியது மட்டும்தான். விலை தொடர்பாக எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. அதனால் விலை விவரங்களை அரசு தாக்கல் செய்ய வேண்டும். விலை விவரங்களை ராணுவ ரகசியமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அது ஒப்பந்த விவரம் மட்டுமே ராணுவ ரகசியம் கிடையாது என்று கூறியது.
ஒத்திவைக்கப்பட்டது
இதையடுத்து இந்த ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசிடம் நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினார்கள். இதில் நிறைய பேரை விசாரிக்க வேண்டும் என்று கூறினார்கள். ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விமான படை அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். வழக்கு விசாரணை இன்று மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.