5 மாத குழந்தையை காக்க ரூ. 6 கோடி ஜிஎஸ்டி வரி தள்ளுபடி.. மத்திய அரசுக்கு குவியும் பாராட்டுகள்
டெல்லி: 5 மாத பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காக மருந்தின் மீதான ஜிஎஸ்டி வரி ரூ 6 கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்தது.
Recommended Video
மும்பையைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 5 மாத குழந்தை டீரா காமத். இவருக்கு அரிய வகை மரபியல் நோய் பாதிப்பு இருந்தது. இதற்கு மரபணு மாற்ற அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
ஆனால் இதற்காக ஜோல்கென்ஸ்மா என்ற மருந்து அவசியம் தேவைப்படுகிறது. இது அமெரிக்காவில் கிடைக்கும். இதன் விலை ரூ 16 கோடியாகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நடுத்தர குடும்பம்
நடுத்தர குடும்பத்தினர் என்பதால் இந்த விலையை கேட்டவுடன் சற்று அதிர்ந்த அந்த பெற்றோருக்கு ஒரே லட்சியம் குழந்தையை எப்படியாவது காப்பாற்றுவதுதான். இதனால் நிச்சயம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாரிடமும் உதவி கேட்டாவது அந்த பணத்தை திரட்டிவிடலாம் என எண்ணினர்.
சமூகவலைதளங்கள்
அதன்படி பெற்றோர் சமூகவலைதளங்கள் மூலம் மருந்திற்கான பணத்தை திரட்டினர். ஆனால் அந்த மருந்திற்கு ரூ 6 கோடி ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டியிருந்தது. இதனால் பணத்துக்கு என்ன செய்வது என தெரியாமல் அந்த பெற்றோர் மனம் கலங்கினர்.
வரி தள்ளுபடி
இந்த மருந்திற்கு வரித் தள்ளுபடி கொடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கும் அந்த பெற்றோர் கடிதம் எழுதியிருந்தனர்.
ரூ 6 கோடி தள்ளுபடி
இதையடுத்து அந்த மருந்திற்கான ரூ 6 கோடி ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளை மத்திய அரசு தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அந்த பெற்றோர் பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். இதனால் சமூக வலைதளங்களில் மத்திய அரசுக்கு பாராட்டுகள் குவிகின்றன.