கொரோனா வைரஸ்.. மோசமாக பாதித்த இடங்கள்.. அடையாளம் கண்ட மத்திய அரசு.. செம்ம பிளான்
டெல்லி: நாட்டின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் ( கோவிட் -19) படுவேகமாக பரவி உள்ள நிலையில், அப்படி வளர்ந்து வரும் ஹாட்ஸ்பாட்களை அடையாளம் கண்டு கடுமையான தனிமைப்படுத்தல் மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 1050 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. இதுவரை 28 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் பகுதிகளை அடையாளம் கண்டு அந்த பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
லாக்டவுன் விதிமுறைகள்
ஞாயிற்றுக்கிழமை, சுகாதாரத்துறை அமைச்சரவை செயலாளர், மாநில அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் லாக்டவுனுக்கான நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரை தனிமைப்படுத்தல் ஆகியவை கண்டிப்பாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
அதிகமான பாதிப்புகள் பதிவாகும் இடங்களில் கடுமையான சோதனைகளுக்கு உட்டுபடுத்தி சமூக பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டது. ஏனெனில் கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவுவதைத் தவிர்ப்பதற்கு இந்த நடவடிக்கை முக்கியமானது, கொத்துக்கொத்தாக ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு பயணிப்பவர்கள் வழியாக கொரோனா பரவும் என்பதால், தடுக்க கடுமையான பரிசோதனைகள் அவசியம் ஆகும்.
14 நாட்கள் தனிமை
இது தொடர்பாக சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில்,"கொரோனா வைரஸ் அதி வேகமாக வளர்ந்து வரும் ஹாட்ஸ்பாட்களை அடையாளம் காண்பதற்கான செயல்முறை தொடங்கியுள்ளது. அங்கு கடுமையான கட்டுப்பாட்டு உத்திகள் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்படும். நாடு முழுவதும் வெளிமாநில தொழிலாளர்கள் புலம் பெயர்ந்து வரும் நிலையில், அவர்களுக்கும் தற்போது வெளிநாட்டு பயணிகளிடம் அமல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்துதல் வழிமுறை அமல்படுத்தப்படும். அதாவது தங்கள் சொந்த கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு வெளியூர்களில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமை கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் கடுமையான கண்காணிப்பில் இருப்பார்கள்.
வெண்டிலேட்டர் வசதிகள்
கொரோனா வைரஸ் (கோவிட் -19) சிகிச்சைக்காக பிரத்யேக மருத்துவமனைகளை மாநிலங்கள் உருவாக்கி வருகின்றன. மேலும் கொரோனா வைரஸ்-பாதித்த நோயாளிகளுடன் மற்ற நோயாளிகள் ஒன்றிணைவதில்லை என்பதை உறுதிப்படுத்த நாங்கள் மாநில அரசுகளை கேட்டுள்ளோம். தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), வென்டிலேட்டர்கள் மற்றும் பிற அத்தியாவசிய உபகரணங்கள் கொள்முதல் மற்றும் உற்பத்தி உள்ளிட்டவற்றை அரசுகள் மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்" என்றார்.