இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து.. மத்திய அரசு ஒரு போதும் அறிவிக்கவில்லை!
டெல்லி: இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என ஒருபோதும் சொல்லவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் பல்ராம் பார்கவா கூறுகையில் கொரோனா வைரஸின் பரவலை தடுக்கவே கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட பெருந்திரளான நபர்களுக்கு தடுப்பூசி போட்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் எனில் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இல்லை.
முகக் கவசம் அணிவது மிகவும் கட்டாயம். தடுப்பு மருந்து போடப்பட்டாலும் முகக் கவசம் அணிவதை விடக் கூடாது. நாம் ஒரு குறிப்பிட்ட சிறிய அளவிலான நபர்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்தி வருகிறோம். எனவே முகக் கவசம் அணிவது பாதுகாப்பானது. கொரோனா பரவலை தடுக்க முகக் கவசமும் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.
மக்கள் கொஞ்சம் உஷார்தான்... இந்த ஆண்டு அதிகம் தேடிய வார்த்தை... கொரோனா பெருந்தொற்று!
அது போல் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில் இந்திய நாட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து போடப்படும் என ஒரு போதும் சொல்லவில்லை. உண்மைத் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே அறிவியல் ரீதியிலான பிரச்சினைகளை ஆராய்வது என்பது முக்கியமானது என்றார்.