அடுத்த இலக்கு பாக். சீனா 'ஆக்கிரமிப்பு' காஷ்மீர் பகுதிகள்.. அமித்ஷாவே அறிவிச்சுட்டாரே!
டெல்லி: பாகிஸ்தான் மற்றும் சீனா ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை மீட்டு இந்தியாவுடன் இணைப்போம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இதனால் ஜம்மு காஷ்மீர் எல்லையில் கூடுதல் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை அதிரடியாக நீக்கியுள்ளது மத்திய அரசு. ராஜ்யசபாவில் இதற்கான தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இன்று லோக்சபாவில் இது தொடர்பான தீர்மானத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆக்கிரமித்த காஷ்மீ பகுதிகளும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள்தான்.
இந்த பகுதிகளையும் மீட்க உயிரையும் கொடுப்போம் என படு ஆவேசமாக கூறினார். ஜம்மு காஷ்மீரில் 35,000 ராணுவத்தினரை குவித்து ஒட்டுமொத்த தகவல் தொடர்புகளையும் துண்டித்து அரசியல் தலைவர்களை சிறையில் அடைத்துதான் 370-வது பிரிவை நீக்கியுள்ளது மத்திய பாஜக அரசு.
ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், சீனா ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகியவற்றுக்கான நடவடிக்கை என்பது சர்வதேச அளவில் நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடியது. தற்போதைய நிலையில் காஷ்மீர் பிரச்சனையை இந்தியாவின் உள்விவகாரம் என பெரும்பாலான நாடுகள் குறிப்பிடுகின்றன.
பாகிஸ்தான், சீனா ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை மீட்கும் போது இதே சொல்லாடல்களை சர்வதேசம் பயன்படுத்துமா? தங்கள் ஆக்கிரமிப்பு பகுதிகளை எளிதில் இழந்துவிட பாகிஸ்தானும், சீனாமும் இடம்தந்துவிடுமா? என்கிற கேள்விகள் ஏராளமாக இருக்கின்றன. மத்திய அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் பெரும் அசாதாரண நிலையையே உருவாக்குகிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.