உச்சத்தில் வெங்காய விலை... மொத்த வியாபாரிகள் வெங்காய இருப்பு வைக்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
வெங்காயம் மொத்த வியாபாரிகள் 25 மெட்ரிக் டன் வரை மட்டுமே இருப்பு வைக்கலாம் என்று மத்திய நுகர்வோர் நலத்துறை செயலர் லீனா கூறியுள்ளார்.
டெல்லி: வெங்காயம் மொத்த வியாபாரிகள் 25 மெட்ரிக் டன் வரை மட்டுமே இருப்பு வைக்கலாம் என்று மத்திய நுகர்வோர் நலத்துறை செயலர் லீனா கூறியுள்ளார். மாநிலங்களுக்கு தேவையான வெங்காயத்தை மத்திய அரசு அனுப்பி வருகிறது. மேலும் மத்திய அரசு வசம் ஒரு லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் இருப்பில் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, வட கர்நாடகாவில் பெய்த பலத்த மழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டது. சென்னை உள்ளிட்ட தமிழக சந்தைகளில் வெங்காயம் விலை ஒரு கிலோ 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. வெங்காயத்தை உரிக்காமலேயே கண்ணீர் சிந்தி வருகின்றனர் இல்லத்தரசிகள்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சின்ன வெங்காயம் விலை ஒரு கிலோ 25 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மழை தீவிரமடையத் தொடங்கிய உடன் வெங்காயம் விலை படிப்படியாக உயர்ந்து தற்போது ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான கால கட்டங்களில் வெங்காயம் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45க்கு விற்பனை செய்கிறது. மணிக்கணக்கில் காத்திருந்து ஒருவருக்கு 2 கிலோ வெங்காயம் வாங்கிச்செல்கின்றனர். பசுமை பண்ணை கடைகளுக்கு வந்த வேகத்தில் விற்று தீர்கிறது வெங்காயம்.
திருச்சி பசுமை பண்ணை கடைகளில் விற்றுத் தீர்ந்த வெங்காயம் - பொதுமக்கள் ஏமாற்றம்
வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் வெங்காயத்தை இருப்பு வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. சில்லரை வணிகர்கள் 2 டன் அளவிற்கும், மொத்த விற்பனை செய்தும் வணிகர்கள் 20 டன்கள் வரை இருப்பு வைக்கலாம் எனவும் மத்திய நுகர்வோர் நலத்துறை தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசின் கையிருப்பில் உள்ள வெங்காயம் மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.
காரீப் பருவத்தில் சாகுபடி செய்யக்கூடிய வெங்காயம் சந்தைக்கு வருகிற வரையில், மக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்கிற விதத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்தது.
வெங்காயத்தின் விலை ஓரளவுக்கு மிதமாக இருந்து வந்தபோதிலும், மராட்டியம், கர்நாடகம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பெய்த பலத்த மழை காரணமாக வளர்ந்து வருகிற காரீப் வெங்காய பயிர் மற்றும் சேமித்து வைக்கப்பட்ட வெங்காயம் சேதத்தை சந்தித்துள்ளது. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரித்து உள்ளது.
ரபி பருவ வெங்காய இருப்பை மத்திய அரசு இந்த ஆண்டு அதிகளவு கைவசம் வைத்திருக்கிறது. விலையை குறைக்க ஏதுவாக, இருப்பு வைத்துள்ள வெங்காயத்தை செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது பாதியில் இருந்து அளவீடு செய்யப்பட்ட முறையில் பெரிய மண்டிகளுக்கு விடுவித்து வருகிறது. இனி வரும் நாட்களில் கூடுதலாக வெங்காயம் விடுவிக்கப்படும்.
வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு ஏதுவாக அரசு 21ஆம் தேதி கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. இந்த கட்டுப்பாடு தளர்வுகள் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இது உயரும் விலையை கட்டுப்படுத்தும் என்று மத்திய நுகர்வோர் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பண்டிகை காலங்களில் வெங்காயத்தின் தேவை அதிகரிக்கும், இல்லத்தரசிகளை கூல் செய்ய வெங்காயத்தின் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இல்லத்தரசிகளின் வேண்டுகோள்.