உஷாராக இருங்கள்.. பாதுகாப்பை பலப்படுத்துங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
Recommended Video
டெல்லி: காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் அசாதாரண சூழல் நிலவி வருவதால் மாநில அரசுகள் பாதுகாப்பை பலப்படுத்தும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை இன்று மத்திய அரசு ரத்து செய்து விட்டது. மேலும் மாநிலத்தையும் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப் போவதாக அறிவித்து விட்டது.
இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருமளவில் படையினர் குவிக்கப்பட்டுள்ளன. முக்கியத் தலைவர்களையும் அரசு வீட்டுக் காவலில் வைத்து விட்டது. இதனால் அங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
இந்த நிலையில் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கலாம் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இதையடுத்து மாநில அரசுகளை அது உஷார்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள், டிஜிபிக்களுக்கு ஒரு உத்தரவினை அனுப்பியுள்ளது.
அதில், மாநிலம் முழுவதும் காவல்துறையினர் உஷார் நிலையில் வைக்கப்பட வேண்டும். முக்கிய இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக முடுக்கி விட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
பல்வேறு கட்சிகள் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து போராட்டங்களை அறிவித்து வருகின்றன. கம்யூனிஸ்ட் கட்சி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.