விவசாயிகள்-மத்திய அரசு 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை தள்ளிவைப்பு... தீர்வு கிடைக்குமா?
டெல்லி: இன்று நடைபெறவிருந்த மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அவர்களுடன் 9 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டது. ஆனால் இதுவரை நடந்த எந்த பேச்சுவார்த்தையிலும் நல்ல முடிவு கிடைக்கவில்லை.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 50 நாளுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் 9 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டது.
ஆனால் இதுவரை நடந்த எந்த பேச்சுவார்த்தையிலும் நல்ல முடிவு கிடைக்கவில்லை. 10-ம் கட்ட பேச்சுவார்த்தை முதலில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 10-ம் கட்ட பேச்சுவார்த்தை ஒருநாள் தாமதமாக நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாளை பிற்பகல் 2 மணிக்கு விஜியன் பவனில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மத்திய அரசு சார்பில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். விவசாயிகள் தரப்பில் விவசாயிகள் சங்க தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
மத்திய வேளாண் இணை அமைச்சர் பார்ஷோட்டம் ரூபாலா இது தொடர்பாக கூறுகையில், வெவ்வேறு இலட்சியவாதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து 'தங்கள் சொந்த வழியில் ஒரு தீர்வை' விரும்புவதால் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்க தாமதமாகி விட்டது. விவசாயிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தால் ஒரு ஆரம்ப தீர்வு இருந்திருக்கலாம். இரு தரப்பினரும் ஒரு தீர்வை விரும்புகிறார்கள், ஆனால் அவை வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளன, எனவே இதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. ஆனால் ஒரு திட்டவட்டமான முடிவு கிடைத்தே தீரும் என்றார்.