மக்களின் துயரத்திலிருந்து லாபமடைய கூடாது.. பெட்ரோல் விலையேற்றம்.. பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்
டெல்லி: பெட்ரோல் விலையேற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அரசு மக்களின் துயரத்திலிருந்து லாபமடையக் கூடாது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை 12 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும் ராஜஸ்தான் உள்ளிட்ட நாட்டின் சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது.
இதன் காரணமாக நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோனியா காந்தி கடிதம்
இந்நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து பிரதமருக்கு சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில், "எரிபொருள் விலைகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது
துயரத்திலிருந்து லாபமடையக் கூடாது
நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல் விலை 100ஐ கடந்துள்ளது. அதேபோல தொடர்ந்து உயரும் டீசலின் விலையும் நாட்டிலுள்ள லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு வேதனையை அதிகப்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மிதமான விலைகள் இருந்தபோதிலும் நம் நாட்டில் பெட்ரோல் டீசல் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. த்திய அரசு மக்களின் துயரத்திலிருந்து லாபமடையக் கூடாது.
மிக அதிகமாக வரி
காங்கிரஸ் ஆட்சியின்போது கச்சா எண்ணெய் விற்கப்பட்ட விலையுடன் ஒப்பிடும்போது, தற்போது பாதி விலைக்கே கச்சா எண்ணெய் விற்பையாகிறது. ஏற்கனவே, நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளும் ஊதியங்களும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், பெட்ரோல் டீசல் விலையேற்றத்தில் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் மீது 33 ரூபாயும் டீசல் மீது 32 ரூபாயும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது அதன் அடிப்படை விலைகளைவிடவும் அதிகம்.
குறைக்க வேண்டும்
பொருளாதாரத்தைத் தவறாக நிர்வகித்ததை மறைக்க மத்திய அரசு இப்படிச் செயல்படக் கூடாது. மக்களை இப்படி சிரமத்தை எதிர்கொள்ள வைப்பதை அரசு நியாயப்படுத்தக் கூடாது. நாட்டிலுள்ள நடுத்தர வர்க்கத்தினர்,விவசாயிகள் என அனைவருக்கும் பலனளிக்கும் வகையில் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும். இனிமேலாவது காரணங்களைக் கூறாமல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை மத்திய அரசு கண்டறிய முயல வேண்டும்" என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்