"பங்களா- பங்களாதேஷை குறிக்கும்".. மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு நிராகரிப்பு
டெல்லி: மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை மாற்ற எந்த ஒரு திட்டமும் கிடையாது என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை பங்களா என்று மாற்ற வேண்டும் என்பது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் கோரிக்கையாக இருக்கிறது. பெயரை மாற்றுவது தொடர்பக மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு குறித்து தெரிந்து கொள்வதற்கு முன் ஏன் இந்த பெயரை மாற்ற மம்தா பானர்ஜி எண்ணுகிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம். கடந்த ஆண்டு இதே மாதம் (ஜூலை) 26-ம் தேதி மேற்கு வங்க சட்டசபையில் தீர்மானம் ஒன்றை கொண்டு வருகிறார்.
பாஜக
மேற்கு வங்காளம் என்று அழைக்கப்படும் தங்களது மாநிலத்தின் பெயரை பங்களா என்று மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டசபையில் வைக்கிறார். இந்த தீர்மானம் சபையில் உள்ள அனைத்து கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்படுகிறது. இதை பாஜக மட்டும் ஏற்கவில்லை.
மோடி
ஒரு மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றால் அதற்கான ஒப்புதலை மத்திய அரசுதான் அரசியல்சாசன அதிகாரத்தின்படி அளிக்க முடியும் . ஆகவே தீர்மானத்தை நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பி விட்டு இவ்வளவு காலம் காத்திருந்தார் மம்தா ஆனால் மோடி அரசு அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை.
பிரயாக்ராஜ்
மம்தா தங்கள் மாநில பெயரை மாற்ற கோரிக்கை வைக்கிறார் ஆனால் ஏற்க மறுக்கும் மத்திய அரசு யாரும் கேட்காமலே உத்திரப் பிரதேசத்தில் பைசாபாத் என்கிற பெயரை அயோத்தி என்றும் அலாகாபாத் என்கிற பெயரை பிரயாக்ராஜ் என்றும் மாற்றியது.
நிறுவனங்கள்
இந்த பெயர் மாற்றங்கள் நிகழ்ந்த அந்த நாட்களில் மம்தா பானர்ஜியின் பதிவு ஒன்று பேஸ்புக்கில் வெளியானது. அந்தப் பதிவில் "அண்மைக் காலமாக, கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும். பாஜக தன் அரசியல் நலன்களுக்கு ஏற்ற வகையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், நிறுவனங்களின் பெயர்களை மாற்றிக்கொண்டு வருகிறது என்பதை நானும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
பெயர் மாற்றங்கள்
சுதந்திரத்துக்குப் பிறகு, சில மாநிலங்கள், நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டதுண்டு. ஒரிஸா ஒடிசாவாகவும் பாண்டிச்சேரி புதுச்சேரியாகவும் மெட்ராஸ் சென்னையாகவும் பாம்பே மும்பையாகவும் பெங்களூர் பெங்களூரூ ஆகவும் என இப்படி பல பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தீர்மானம்
மாநிலத்தினுடைய, உள்ளூர் மக்களுடைய உணர்வுகளை மதித்து இவை செய்யப்பட்டன. இவை மிகச் சரியான நடவடிக்கைகளாகும். ஆனால், வங்காளம் என்று வரும்போது இந்த அணுகுமுறை முற்றிலும் மாறிவிடுகிறது. எங்கள் தாய்மொழியான பங்களாவோடு தொடர்புடைய அளவில் உள்ளூர் மக்களின் உணர்வுகளின் அடிப்படையிலேயே அண்மையில் நாங்கள் எங்கள் மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்பதைக் கோரி சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தோம்.
தீர்மானம்
ஆங்கிலத்தில் West Bengal என்று அழைக்கப்படுவதை Bengal என்றும் வங்காள மொழியில் பங்களா என்றும் இந்தியில் பெங்கால் என்றும் மாற்றப்பட வேண்டும் என்கிற அந்தத் தீர்மானத்தை ஒன்றிய உள் துறை அமைச்சகத்துக்கு எங்கள் சட்டப்பேரவை அனுப்பியிருந்தது. ஆனால், பங்களா என்ற பெயரையே மூன்று மொழிகளிலும் பயன்படுத்துங்கள் என மத்திய உள் துறை அமைச்சகம் எங்களுக்கு அறிவுறுத்தியது.
தெளிவாகிறது
அதை ஏற்று, எங்கள் சட்டப்பேரவையில், எங்கள் மாநிலத்தின் பெயர் மூன்று மொழிகளிலும் பங்களா என்றே மாற்றப்பட வேண்டும் என்று கோரி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி மீண்டும் ஒன்றிய உள் துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், அது இப்போது நீண்ட நெடுங்காலமாக அங்கே நிலுவையில் இருக்கிறது. வங்காள மக்களுக்கு அதிகாரமில்லை என்பதைத்தான் இது தெளிவாகக் காட்டுகிறது.
பங்களாதேஷ்
பிரிவுப்படாத வங்காளத்தின் தலைநகராக இருந்தது கொல்கத்தாதான். இந்தியா, பங்ளாதேஷ் ஆகிய இரு நாடுகளின் தேசிய கீதங்களை எழுதியது எங்கள் மண்ணின் மைந்தர் கவிகுரு ரவீந்திரநாத் தாகூர்தான். நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம். நாங்கள் பங்களாதேஷையும் பங்களாவையும்கூட நேசிக்கிறோம்.
தீர்மானம்
பெயர்களில் உள்ள ஒற்றுமை எந்த இடைஞ்சலையும் ஏற்படுத்தி விடாது. நமது இந்தியாவில் உள்ளதைப் போலவே நமது அண்டை நாட்டில் ஒரு பஞ்சாப் இருக்கிறது. எங்கள் மாநிலத்தில் ஒரு வலிமையும் இல்லாத (zero strength) ஓர் அரசியல் கட்சி எங்கள் மாநிலத்தின் பெயரைத் தீர்மானிக்குமா, அல்லது அரசியல் சாசனக் கடப்பாடுகளுக்கும் கூட்டாட்சி அமைவுக்கும் இசைவான முறையில் எங்கள் மாநில சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானம் மதிக்கப்படுமா?" என்று பதிவிட்டிருந்தார்.
உத்தரவு
இந்த நிலையில் இது தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், மாநிலத்தில் உள்ள கிராமம், நகரங்கள், ரெயில் நிலையம், விமான நிலையங்களின் பெயரை மாற்ற வேண்டுமென வரும் கோரிக்கைகள் தொடர்பாக, அந்த துறையின் பதிலை கேட்டு அமைச்சகம் உடனடியாக உரிய உத்தரவை பிறப்பிக்கிறது.
மேற்கு வங்காளம்
எந்தவொரு மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றாலும், அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்ய வேண்டும். ஆனால் தற்போது வரை அரசியலமைப்பை திருத்துவதற்கான எந்த திட்டமும் இல்லை. எனவே மேற்கு வங்காளம் என்ற பெயரை பங்களா என்று மாற்ற முடியாது எனக் கூறியுள்ளார்.