குடியுரிமை சட்ட திருத்த மசோதா... அரசியல் சாசனத்தை சீர்குலைக்கிறது: சட்ட வல்லுநர்கள்
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதா அரசியல் சாசனத்தின் அடிப்படையை சீர்குலைக்கிறது; சட்ட ரீதியாக இந்த மசோதா செல்லாமல் போகும் என்கின்றனர் சட்டவல்லுநர்கள்.
1955-ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தில் திருத்தமாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது. 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்னதாக அகதிகளாக வந்தவர்கள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்கிறது இந்த திருத்த மசோதா.
லோக்சபாவில் இம்மசோதா மீதான விவாதத்தின் போது அரசியல் சாசனத்தின் 14-வது சரத்தை இம்மசோதா மீறுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் அரசியல் சாசனத்தின் எந்த ஒரு சரத்தையுமே இம்மசோதா மீறவில்லை; எந்த அரசியல் சாசன பிரிவுக்கும் எதிரானதும் அல்ல என உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கினார்.
இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் உபமன்யூ ஹசாரிகா கூறுகையில், இம்மசோதா அரசியல் சாசனத்தின் 14-வது சரத்தை மீறுவதாகவே உள்ளது. மத்திய அரசு, அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவின் கீழ் தேவையான உட்பிரிவுகளை கொண்டுவந்துள்ளதாக கூறுகிறது. உட்பிரிவுகளைக் கொண்டு வருவதற்கு அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவு அனுமதிக்கிறது; ஆனால் தனி சட்டங்களை கொண்டுவர அது அனுமதிக்கவில்லை என்கிறார்.
ரஜினிக்கு 70 வயசாயிருச்சு.. ஒரு தேர்தலைதான் தெம்பாக சந்திக்க முடியும்.. ரங்கராஜ் பாண்டே பரபர பேச்சு
லோக்சபா முன்னாள் செயலாளர் ஜெய்னரல் பிடிடி ஆச்சாரியும் இந்த மசோதா அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்கிறார். எந்த ஒரு மதத்தின் அடிப்படையிலும் குடியுரிமை வழங்கக் கூடாது என்பதுதான் அரசியல் சாசனம் சொல்வது. அதை மீறியதாக இம்மசோதா இருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் அரசியல் சாசனத்தில் குடியுரிமை என்பது மதச்சார்பற்றது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது முஸ்லிம்களை புறக்கணித்துவிட்டு இதர மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை வழங்குவதாக சொல்கிறது மத்திய அரசு. அதனால்தான் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்கிறோம்.
ஆனால் மற்றொரு வழக்கறிஞரான சாய் தீபக், அரசியல் சாசனத்தின் எந்த ஒரு சரத்தையும் இம்மசோதா மீறவில்லை. குறிப்பாக அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவுக்கு எதிரானது அல்ல என்கிறார். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணனோ, மதரீதியான பாகுபாட்டை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது இம்மசோதா. அரசியல் சாசனத்தின் அடிப்படையையே இது சீர்குலைக்கிறது என்கிரார்.