தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை.. கொங்கு நாடு கோரிக்கைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி!
டெல்லி: தமிழ்நாட்டை 2 ஆக பிரிக்கும் திட்டம் ஏதும் தற்போது பரிசீலனையில் இல்லை என மத்திய அரசு மக்களவையில் இன்று தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பெற்றது. இந்த நிலையில் மத்திய அரசை ஒன்றிய அரசு என திமுக அரசு விமர்சித்தது. இதற்கு அண்மையில் கூடிய தமிழக சட்டசபையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
அப்போது இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார். அவர் கூறுகையில், நமது அரசியலமைப்புச் சட்டத்தில், இந்தியா, மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும். என்றுதான் உள்ளது. எனவே, ஒன்றியம் என்று குறிப்பிடுவதை குற்றமாக கருத வேண்டாம். சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை. கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருப்பதால் ஒன்றிய அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், பயன்படுத்துவோம்.
இந்த வார்த்தையை கேட்டு யாரும் அலற வேண்டாம் என்றார் ஸ்டாலின்.
Exclusive: கொங்குநாடு யார் கேட்டது..? பிரிவினைவாதிகளை ஒடுக்க வேண்டும்... சீறும் தனியரசு..!
தமிழக பாஜக தலைவர்
இதற்கு அப்போதைய மாநில பாஜக தலைவர் எல் முருகன் பதிலடி கொடுக்கும் விதமாக நாங்களும் இனி ஸ்டாலினை ஒன்றிய முதல்வர் என்றுதான் அழைப்போம் என கூறியிருந்தார். ஒன்றிய அரசு என்ற சொல் அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
மத்திய அமைச்சர்
இந்த நிலையில்தான் தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகன் கடந்த ஜூலை மாதம் 8ஆம் தேதி மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம்பெற்றுள்ளார். இதையடுத்து அவரது சுயகுறிப்பில் பொது வாழ்க்கைக்கு வருவதற்கு முன்னர் 15 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.
துணை தலைவர்
அவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராகவும் கடந்த 2017- ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பிஎச்டி படித்துள்ளார். கொங்குநாடு, தமிழ்நாடு, ஆண்- 44 வயது என குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. முருகன் தாராபுரத்தை சேர்ந்தவர், தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு என போடாமல் கொங்கு நாடு என போட்டது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாஜகவின் பதிலடி
ஒன்றிய அரசு என திமுக கூறுவதற்கு பாஜகவின் பதிலடியாகவே இது பார்க்கப்பட்டது. மேலும் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்ததால் அதிமுக வலுவாக இருந்த கொங்கு மண்டலங்களில் அக்கட்சிக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் பாஜகவுக்கு கிடைத்தது. இதையடுத்து கொங்கு நாடு என்ற தனி மாநிலத்தை பிரிக்குமாறு தமிழக பாஜகவினர் கோரிக்கைகளை எழுப்பினர்.
நடந்த விவாதங்கள்
இதுகுறித்து சமூகவலைதளங்களில் பெரும் விவாதங்களும் நடந்தன. மேலும் டெல்டாவை பிரித்து சேர நாடு உருவாக்குமாறும் கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் இதுகுறித்து எல் முருகன் கூறுகையில் அமைச்சரவை மாற்றத்தின் போது வெளியிடப்பட்ட தனது விவரக் குறிப்பில் கொங்கு நாடு என்று இடம்பெற்றிருந்தது தட்டச்சுப் பிழையே என்றும் விளக்கமளித்திருந்தார். எனினும் கொங்கு நாடு கோரிக்கை ஓயாமல் இருந்தது.
Recommended Video
கொங்கு நாடு
மேலும் மேற்கு தமிழகம் அல்லது கொங்கு நாடு என்ற மாநிலம் விரைவில் உருவாகும் என்றும் பலர் தெரிவித்திருந்தனர். இது ஒரு புறமிருக்க தமிழக பாஜக தலைவராக சென்னையில் பொறுப்பேற்ற அண்ணாமலை நாமக்கலுக்கு சென்றதும் அங்கு அவரை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. நாமக்கல் மணிக்கூண்டு பகுதியில் நகர கிளை சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில் கொங்கு நாட்டின் வருங்கால முதல்வரே என வாசகம் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் இதுகுறித்து பாஜக தலைவர்கள் "கொங்கு மாநிலம் குறித்து பாஜக எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஒன்றிய அரசு என திராவிடக் கட்சிகள் முழங்கியதால் அவர்களுக்கு பாடம் புகட்டவே கொங்கு நாடு கோஷம் எழுப்பப்படுகிறது. மாநில மக்கள் விரும்பினால் அதற்கேற்றாற்போல மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தனர்.
இரண்டாக பிரிக்கும் தமிழகம்?
இந்த நிலையில் தமிழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என எம்பிக்கள் பாரிவேந்தர், ராமலிங்கம் ஆகியோர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர். இவர்களது கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் தமிழ்நாட்டை 2 ஆக பிரிக்கும் திட்டம் ஏதும் தற்போது பரிசீலனையில் இல்லை என விளக்கம் அளித்துள்ளார். இதன் மூலம் கொங்கு நாடு கோரிக்கைக்கு மத்திய பாஜக அரசு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.