ரபேல்: சுப்ரீம் கோர்ட்டுக்குத் தவறான தகவலா?.. திருத்தம் கோரி மனு செய்த மத்திய அரசு
டெல்லி: ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பில் திருத்தம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு செய்துள்ளது.
ரபேல் வி்வகாரம் தொடர்பான வழக்கில் சமீபத்தில் உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்தது. அதில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு முறையாக செயல்பட்டுள்ளது. ரபேல் போர் விமானங்கள் தொடர்பான அனைத்தையும் முறையாக செய்துள்ளது. எனவே இது குறித்து விரிவான விசாரணை தேவையில்லை என்று கூறப்பட்டிருந்தது.
ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக சிஏஜி அளித்த அறிக்கையை பொதுக் கணக்குக் குழு பரிசீலித்துள்ளதாகவும் அந்த அடிப்படையில், இந்தத் தீர்ப்பை அளிப்பதாகவும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இங்குதான் பிரச்சினை வெடித்துள்ளது.
பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூன கார்கே ஆவார். இவர் சிஏஜி அறிக்கை தனது குழுவுக்கு வரவே இல்லை என்றும் தான் அதைப் பார்க்கக் கூட இல்லை என்றும் அதிரடியாக கூறி விட்டார். மேலும் இதுதொடர்பாக நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் ராகுல் காந்தியும் மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்விகளைக் கேட்டார்.
சிஏஜி அறிக்கை என்னவாவனது, எங்கே போனது, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து விட்டார்களா என்றும் அவர் விளாசித் தள்ளியிருந்தார். இது மத்திய அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மத்திய அரசு சார்பில் இன்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், உச்சநீதிமன்றத்திடம் சீலிட்ட கவரில் கொடுக்கப்பட்ட அபிடவிட்டில், சிஏஜி, பொதுக் கணக்கு குழு ஆகியவை தொடர்பான தகவல் தொடர்பாக தவறான புரிந்து கொள்ளுதல் ஏற்பட்டுள்ளது. அந்த ஆவணத்தில், சிஏஜி தாக்கல் செய்த அறிக்கையை பொதுக் கணக்குக் குழு படித்ததாக கோர்ட் தவறுதலாக புரிந்து கொண்டுள்ளது.
உண்மையில் பொதுக் கணக்குக் குழு சிஏஜி அறிக்கையைப் படிக்கவில்லை. இந்தத் தகவல் தொடர்பாக உச்சநீதிமன்றம் திருத்தம் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு மனுவில் கூறப்பட்டுள்ளது.