எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே 3 தொழிலாளர் நல மசோதாக்களை தாக்கல் செய்த மத்திய அரசு
டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே 3 தொழிலாளர்கள் நல மசோதாக்களை மத்திய அரசு சனிக்கிழமையன்று தாக்கல் செய்தது.
தொழில் பாதுகாப்பு, சுகாதாரம், பணி நிபந்தனைகள் 2020, தொழில்துறை சார் உறவுகள் 2020, சமூக பாதுகாப்பு 2020 ஆகியவைதான் மத்திய அரசு தாக்கல் செய்த மசோதாக்கள். இந்த மசோதாக்களை தொழில்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் தாக்கல் செய்தார்.
இடம்பெயர் தொழிலாளர்களுக்கு ஊதியம்
இந்த சட்டங்களின் மூலம் மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயரும் தொழிலாளர்கள் மாதந்தோறும் ரூ18,000 ஊதியம் பெற வகை செய்யப்பட்டுள்ளதாக லோக்சபாவில் மத்திய அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் தெரிவித்தார். தற்போதைய நிலைமையில் ஒப்பந்ததாரர்கள் மூலம் அழைத்துச் செல்லப்படும் இடம்பெயர் தொழிலாளர்கள் மட்டும்தான் தொழிலாளர் நல சட்டங்களின் கீழ் பாதுகாப்பு பெறுகின்றனர். சொந்தமாக இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை.
பிற மாநிலங்களுக்கு தொழிலாளர்கள்
இதனை மாற்றி அமைக்கும் வகையில்தான் இந்த மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. திருத்தப்பட்ட மசோதாக்களில் இடம்பெயர் தொழிலாளர்கள் என்பவர்கள் யார் என்பது குறித்து மாற்றி வரையறை செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு மாநிலத்தில் நிறுவன உரிமையாளர் ஒருவரால் நேரடியாகவோ அல்லது ஒப்பந்ததாரர் மூலமாகவோ பணிக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளரி அந்த நிறுவனத்தின் வேறொரு மாநிலத்துக்கு மாற்றப்பட்டாலும் கூட தொழிலாளர் நல சட்டங்களின் கீழ் பயனடைய வகை செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணத் தொகை
மேலும் இடம்பெயருவதற்கான ஊக்கத் தொகை ஒன்றையும் மத்திய அரசு இம்மசோதாக்களில் ஏற்பாடு செய்துள்ளது. அதாவது இடம்பெயர் தொழிலாளர்கள், பிற மாநிலங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும்போது அதற்கான பயணத் தொகையை வழங்கவும் இந்த மசோதாக்களில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
இதற்காக கடந்த ஆண்டு தாக்கல் செய்த தொழிலாளர் சட்டங்கள் தொடர்பான 3 மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெற்றிருக்கிறது. மத்திய அரசின் புதிய தொழிலாளர் நல மசோதாக்களைத் தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் கட்சியின் மணீஷ் திவாரி, சசிதரூர் ஆகியோர், இந்த மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.