குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் வடகிழக்கு மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்துக்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து ஏராளமான இந்துக்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள் அகதிகளாக இந்தியாவில் குடியேறியுள்ளனர். இவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்காக 1955-ம் ஆண்டு இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இம்மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஆனால் மத அடிப்படையிலான இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் வடகிழக்கு மாநிலங்களும் தங்களது தனித்த அடையாளங்கள் இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் பாதிக்கப்படும் என தெரிவித்து வருகின்றன.
இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டங்களிலும் வடகிழக்கு மாநில மாணவர்கள், பொதுமக்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகள் தங்கள் மாநிலங்களில் இதை அமல்படுத்தக் கூடாது என்கிற கோரிக்கையை முன்வைத்தன.
இந்நிலையில் 7 வடகிழக்கு மாநிலங்களுக்கும் இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
அதாவது
அரசியல் சாசனத்தின் 6-வது அட்டவணையில் சரத்துகள் 244(2), 275-ன் கீழ் வரும் பழங்குடிகளின் மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மணிப்பூர்
மற்றும்
இந்திய குடிமக்களாகவே இருந்தாலும் கட்டாயம் உள்நாட்டு நுழைவு அனுமதிச் சீட்டு பெற்றுதான் நுழைய வேண்டும் என்கிற சட்டம் அமலில் உள்ள மாநிலங்களான நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய 7 மாநிலங்களுக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.