டெல்லியில் உறைய வைக்கும் கடுங்குளிர்..தொடரும் விவசாயிகள் கிளர்ச்சி- இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை
டெல்லி: டெல்லியில் 71 ஆண்டுகளுக்குப் பின்னர் கடுங்குளிர் நிலவுகிறது. இதனையும் பொருட்படுத்தாமல் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது.
மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் விவசாயிகள் டெல்லி சலோ போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர். கடந்த 6 நாட்களாக டெல்லியின் உள்ளேயும் எல்லையும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு திரண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டம் மத்திய அரசை அதிர வைத்திருக்கிறது. ஏற்கனவே விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என மத்திய அரசு அறிவித்தது.
மேலும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில் டெல்லியில் இன்று மத்திய அரசு அதிகாரிகளுடன் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.